Tuesday, February 14, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #2

பிப்ரவரி 14 2012                                                                                                    கர மாசி 2

பெங்களூரில் நாளுக்கு நாள் வெய்யில் அதிகமாகிக் கொண்டே போகிறது. நேற்று திருநெல்வேலிலும் பெங்களூரிலும் அதிகளவு வெப்பம் என்பது ஒரே அளவில் பதிவாகியிருக்கிறது. ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு, போட வேண்டிய இடத்தில் போடாமல், எச்சுத்தட்டை தூக்கிக் கொண்டு படியிறங்கும் வரை எனக்கு முத்தியிருக்கிறது.

இந்த வருடம் தொடங்கி ஒன்றரை மாதம் ஆகிவிட்ட பின்னும் உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை. தாயார் சன்னதி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வருடங்கள் அந்த நாசமாய்போன ஊரில் சுற்றியிருக்கிறேன். எனக்குத் திருநநேலின்னா அது சுலோச்சன முதலியார் பாலத்துக்கு இந்தப் பக்கம் தான். அப்பப்போ ஆரெம்கேவிக்காக அந்தப் பக்கம் போவதுண்டு. இப்போ ஆரேம்கேவியும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வந்தாச்சு. இந்த புக்க இன்னும் ரெண்டு மூணுவாட்டி படிச்சா நானும் பிரத்யேக திருநேலி வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் என்னத் திட்டக்கூடாது. அண்ணாச்சி சுகா இருக்கார். அவரை திட்டவும்.

பிப்ரவரி 14, என்றாலே என் நினைவுக்கு வருவது எங்கள் கணிதப் பேராசிரியர் சுந்தரராஜன் சார் தான். கல்லூரியின் ஒரு கட்டிடத்தில் அவர் பாடம் எடுக்கிறார் என்றால், மற்ற எந்த கட்டிடத்திலிருந்தும் துல்லியமாக கேட்கலாம். அடிவயிற்றிலிருந்து அவர் கத்திக் கத்திப் பாடம் எடுக்கும் போது, அது மத்தியானமே ஆனால் கூட தூக்கம் வராது. பாடத்தை எடுத்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், ஒவ்வொரு தலைப்புக்கு அவர் தரும் நோட்ஸும் மறக்கவே முடியாதது. அவருக்காக ஒரு orkut communityபிரசன்னா உருவாக்கினான்.

ஒரு பிப்ரவரி 14ஆம் நாள் பாடம் எடுக்க வந்தவர், கரும்பலகையில் எழுத கையை உயர்த்தினார், பின் ஏதோ நியாபகம் வந்தவராக திரும்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்,

"காண்டாமிருகத்த மனசுக்குள்ள நுழைய விடவேகூடாது. நொழைஞ்சிடுச்சுன்னா.. அவ்ளோதான்”