Wednesday, January 9, 2013

லூசுத்தனமான வாழ்க்கை #6

That was a very fast year.

நடந்த நல்ல விஷயம், ஆம்னிபஸ்ஸில் சேர்ந்தது. இப்போது வாரத்திற்கு ஒரு புத்தகம் என்ற அளவிலாவது படிக்க முடிகிறது. ட்விட்டரிலிருந்து ஆம்னிபஸ் போய் அரட்டை அடிக்க முடிகிறது. சில புத்தகங்களைப் படிக்கும் போதே அதைப் பற்றி ஏதாவது தோன்றுகிறது. சில புத்தகங்களைப் பற்றி ஒன்றுமே தோன்றுவதில்லை. ஆனால், மூளையை மிரட்டி உருட்டி ஏதாவது யோசிக்கச் செய்து எழுத வேண்டியிருக்கிறது. படிக்கும் போது நிறைய விஷயங்கள் தோன்றினாலும் கூட எழுதும்போது அவற்றில் பாதி கூட மனதில் வந்து தொலைக்காது. மொத்தத்தில் ஆம்னிபஸ்ஸால் என்னுடைய நேரம் கொஞ்சம் உபயோகமாக பயன்படுகிறது.

போன வருடம் நிறைய பேருடன் (மெய் மற்றும் மெய் நிகர் வாழ்க்கையில்) சண்டை போட்டிருக்கிறேன். சிலர் என்னிடம் பேச்சை குறைத்துக் கொண்டுவிட்டார்கள். சிலர் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். அவர்கள் எல்லோருடனுமே ஏண்டா சண்டை போட்டோம் என்றிருக்கிறது.

போன வருடத்தின் முதற்பாதியில் அருமையாகத் தூங்கினேன். சனிக்கிழமை மதியம் சாப்பிட்டுவிட்டு மூன்று மணிநேரம் தூங்குவது தான் அந்த வாரத்தின் மிகச் சிறந்த தூக்கமாக இருந்தது. வருடத்தின் பிற்பாதியில் இந்தத் தூக்கமென்பது மிகக் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஏதாவது சிறிய ஒலி கூட தூக்கத்தைக் கலைத்துவிடுகிறது. ஆனால், முன்னைப் போல் தூங்க வேண்டும் என்கிற எண்ணமேயில்லை.

போன வருடச் சாதனையென்பது, IRCTCல் டிக்கெட் கணக்கு துவக்கி, சில பல தட்கால் டிக்கெட்டுகள் புக் பண்ணியது தான்.

சனி ஞாயிறுகளில் பொழுது போக்குவது சிரமமாக இருக்கிறது. சில பல சனிக்கிழமைகள் வங்கிக்குச் சென்று வந்தேன்; என்னமாகப் பொழுது போகிறது தெரியுமா? பாஸ்புக்கில் எண்டரி போட ஒரு க்யூ. புதிய அக்கவுண்ட் ஓப்பன் பண்ண ஒரு க்யூ. அப்புறம் பணம் எடுக்க, பணம் செலுத்த ஒரு க்யூ. இப்படி ஏதாவது ஒரு க்யூவில் நின்று கொண்டால் அரைமணி நேரம் கியாரண்டியாக போய்விடும். இடையே வயதானவர்கள், அழகானவர்கள் என்று வேண்டியவர்களுக்கு வழிவிட்டு தேவைக்கேற்ப நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஒருநாள் நின்னா போதும் வங்கிக்குள்ளேயே ஒரு டூரிஸ்டு கைடு மாதிரி செயல்படலாம்.

சில இடங்களில் பிரச்சனை நடக்கப்போவது போல் தெரிந்தால், அங்கு போய் பிரச்சனை வராமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது. சில இடங்களுக்கு சரியான நேரத்துக்கு போய், பிரச்சனை துவங்க அறிகுறியேதும் இல்லையென்றால், வெறுத்துப்போய் ஏதாவது சொல்லி நானே ஒரு பிரச்சனையை உண்டு பண்ணிவிடுகிறேன். “இவன், நாளக்கழிச்சு வர்ற பிரச்சனைய இன்னிக்கே கொண்டு வந்திருவான்”ன்னு எங்கப்பா கூட சொல்ல ஆரம்பிச்சுட்டார்.

இந்த ப்ளாக் சொந்தக் கதை எழுதுவதற்காக ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒருவருடமாக அது தான் மட்டும் தான் நடக்கிறது.

Monday, October 8, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #5

என்னைச் சுற்றி எப்படி திடீரென்று இத்தனை மனிதர்கள்? திடீரென்று இல்லை காலங்காலமாக, கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் பெருகி வந்திருக்கிறார்கள். இன்னும் பெருகி வரப்போகிறார்கள். என்னை ஒரு மூலையில் போட்டு அடைக்க வேண்டியிருக்கிறது. தூங்குவதற்கும் விழிப்பதற்கும் நாற்காலியை நகர்த்துவதற்கும் அலாரம் வைப்பதற்கும் எல்லாருடைய சவுகரியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நானென்பது இரண்டாம்பட்சமாகி, நானெனும் பொய்யை முன்னால் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மெய்யுலகில் போதாதென்று, மெய்நிகர் உலகில் மொய்க்கும் கூட்டம். பொறாமையும் இயலாமையும் கூடவே மறந்தேபோய்விட்ட பழைய கனவுகளும் அதன் தோல்விகளும்; கருணை, காருண்யம் இத்யாதிகளுக்கெல்லாம் எங்கே இடம்? கடித்துக் குதறுவதே நியாயமகாப்படுகிறது. உள்ளிருக்கும் மிருகம் வெளிப்பட்டு நிற்கையில், உலகமே அழுகிறது.

லட்சியவாதிகள் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். குறைந்தபட்ச லட்சியம் கூட இல்லாத மிருகம், இப்படி ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.

Thursday, June 14, 2012

அறிவுரை, ஆராயக்கூடாதது



மேலிருக்கும், ஹென்றி மில்லரின் அறிவுரையை நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். 

நண்பர் : சூப்பர் சார். பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெச்சுக்கணும். ரொம்ப நன்றி. 

நண்பர்: ஆனா அஞ்சாவது பாயிண்டும் எட்டாவது பாயிண்டும் ஒரே சமயத்தில் ஒர்க் அவுட் ஆகுமா?

நான்: தெரியலியே சார்! இல்லாட்டி சும்மா எழுதிட்டு.. அப்புறம் மானே தேனே சேர்த்துக்கலாம்னு சொல்றார் போல
நண்பர்: அஞ்சாவது பாயிண்ட் : படைப்பூக்கம் இல்லாதபோது அதை ஒரு வேலையாச் செய்.

எட்டாவது பாயிண்ட்: வண்டி மாடு கணக்கா வேலை செய்யாதே. உன் சந்தோஷத்துக்கு மட்டுமே வேலை செய்.

இது எப்படி?

நான்: ஒருவேளை எந்த காரணத்தைக் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதேன்னு சொல்றதுக்காக அஞ்சாவத சொல்றாரோ?

நண்பர்: அப்படியாதான் இருக்கும். இல்லாட்டி லாஜிக் இடிக்குமே?

நான்: இப்போ ஒன்பது இடிக்குமோ? ஒன்பது: முடியலையா விட்டுடு. ஆனா அடுத்த நாள் கண்டிப்பா தொடர்ந்து செய்

நண்பர்: என்ன இது, இவரோட அட்வைசுக்கே கோனார் நோட்ஸ் எழுதணும் போலயே!

நண்பர்: அத்தோட நாலாவது பாயிண்ட்டை சேத்துப் படிங்க :)

நான் : சார்! தனித்தனியா படிச்சிட்டு ஃபாலோ பண்ணுவோம்! இப்படி யோசிச்சா முதலுக்கே மோசம்