Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts
Showing posts with label கிழக்கு பதிப்பகம். Show all posts

Thursday, September 2, 2010

முத்தொள்ளாயிரம் - என். சொக்கன்



தலைப்பு: முத்தொள்ளாயிரம்
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
புரியும்படி: என். சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
 விலை: ரூ. 150




தமிழ் செய்யுள்களையும் இலக்கியங்களையும் பள்ளியில் மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் கோனார் தமிழ் உரை உதவியதில் சீர் பிரித்துப் படிக்கக் கூட கற்றுக்கொள்ளவில்லை. கோனாரைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் என்னுடைய சோம்பேறித்தனம். சரி சுயபுராணத்தை விட்டுவிட்டு இந்த மூவேந்தர் புராணத்தைப் பார்க்கலாம்.

முத்தொள்ளாயிரம், இந்த தமிழ் நூலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுதும் கிடைக்கின்றன. மொத்தம் 110 வெண்பாக்கள் உள்ளன (சிலர் 109 வெண்பாக்கள் என்கிறார்கள்). அனைத்தும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய வெண்பாக்கள். ஒரு புலவரே மூன்று அரசர்களைப் பற்றியும் எழுதியிப்பாரா என்பது சந்தேகமே. வேறு வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதியிருக்காலாம். இந்தப் பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. (மேற்ப்படி தகவல்களூக்கு சில சுட்டிகளை பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.)

பெரும்பாலான பழந்தமிழ் நூல்களைப் போல இதுவும் அரசர்களின் சிறப்புகளை பல உவமைகளைக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தில் பெரும்பாலும் காதற் பாடல்களே உள்ளன. புலவர்கள் தங்களை ஒரு பெண் போல பாவித்துக் கொண்டு இந்தப் பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படி எழுதுவதை கைக்கிளை என்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் காலம் தெரியாவிட்டாலும், அக்காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. என் மூளைக்கு எட்டிய சில விஷயங்களை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலும் அனைத்துப் பாடல்களுமே உவமையோடு தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல ஆச்சரியங்கள். எனக்கு பிடித்த ஒரு உவமை. சோழன் வீதியில் வருவதைக்காண பெண்கள் தங்கள் வீட்டு சன்னல் அருகே நிற்கிறார்கள். சோழனைத் தேடும் அவர்களின் கண்கள், வலையில் சிக்கிய மீன்கள் அலைபாய்வதைப் போல் பாய்கிறதாம்.

முத்தொள்ளாயிரக் காலத்தில் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றிய பாடல் இதில் உள்ளது. அரசர்களை முருகனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாடலில் இந்திரனும் வருகிறான். ஒரு பாடலில் கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனைப் பற்றிக் கூறுகையில் ஒரு பாடலில் கோழிக்கொடி ஏந்தியிருப்பவன் என்று வருகிறது. நமக்குத் தெரிந்தவரை முருகன் ஏந்திக்கொண்டிருப்பது சேவற்க் கொடி. ‘கோழி’ என்ற சொல் ஆண்பாலையும் குறிக்கிறதா? இல்லை முருகனின் வேல் மாறிவிட்டதா? தெரியவில்லை.

இந்தக் காதலில் விழுவது என்பது எல்லாக் காலங்களிலும் துன்பம் தான் போலும். எனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை. ஆனால், முத்தொள்ளாயிரம் படித்தவுடன் அவர்கள் சொல்வது சரிதானா என்று சோதிக்கத் தோன்றுகிறது. அந்தந்த ஊர்ப் பெண்கள், அவர்களின் அரசர்களின் மீது அநியாயத்திற்கு ஆசை கொள்கிறார்கள் (அந்த ஊர் ஆண்கள் அய்யோ பாவம்!). அரசனைக் கண்டவுடன் அவர்கள் நெஞ்சம் அவன் பின்னாலேயே போய்விடுகிறது. இல்லை இவர்களே நெஞ்சைத் தூதாக அனுப்பிவிடுகிறார்கள். அப்படிப் போன ஒரு நெஞ்சம், பாண்டியனின் வாயிலில், தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனிடம் பேச காத்து நிற்கிறதாம். இன்னொருத்தியின் நெஞ்சம், யாருக்கும் போக வர வழி கொடாமல் பாண்டியனின் வாயிலில் நிற்கிறதாம். (என்னுடைய மூளை தான் சில நேரங்களில் வேலை செய்வது போல் தெரியவில்லை. எங்காவது போய் வருகிறதோ?)

அப்புறம் சொக்கனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அட! இவர் எந்த ஊர் ராஜாவா? இவர் தான் முத்தொள்ளாயிரத்திற்கு ‘புரியும் படி’ உரை எழுதியிருக்கிறார். நம்மை மூன்று நாடுகளூக்கும் தோளில் கைப்போட்டுக் கொண்டு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் மண்டையில் ஏறும் படி விளக்கம் தருகிறார்; சப்பரம் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளை தோளில் தூக்கிக் காண்பிக்கும் அப்பாமார்கள் போல (ஆகா! எனக்கும் கூட உவமை எழுத வருகிறதே!). சொக்கன் ஒருவரையும் விடுவதில்லை. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மகளுக்கும் அவள் தாய்க்கும் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். காதல் வயப்பட்டிருக்கும் பேதைகளிடம் போய் விசாரிக்கிறார். யானைகளிடம் கூட பேச்சுக் கொடுக்கிறார். சரி மனிதர் ஏதோ நல்லது செய்கிறார் என்று அவர் பின்னால் போனால், போர்களத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் பேய்களையும் பிணங்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய ஒரு முன்னுரையை மட்டும் எழுத மறந்துவிட்டார் போலும். அதை விரைவில் வரப்போகும் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிடுவார் என்று நம்புவோம்.

இந்தப் புத்தகம் மற்ற பழந்தமிழ் நூல்களையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சொக்கனின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் தான். புத்தகத்தை வடிவமைத்தவருக்கு தாராளான மனம் போலும். எழுத்துக்களை கொட்டி அடைக்காமல், விசாலமாக வடிவமைத்திருக்கிறார்.

மேற்படி தகவல்களுக்கு:

Saturday, February 6, 2010

வேலையில் முன்னேற!




தலைப்பு: வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா
எழுத்தாளர்: டாக்டர் கேரன் ஓடாஸோ
தமிழில்: ஆக்குலர் ரவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்ப்பகம் 
விலை: ரூ.125
மேலும் விபரங்களுக்கு...

இது கார்பரேட் நிறுவனங்களின் காலம். மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிகமான ஊழியர்கள் இவை மட்டுமே கார்பரேட்களின் அடையாளம் இல்லை. அவர்களின் தொழில்முறை, செயல்முறை, அணுகுமுறை, போன்ற பலவும் முறைப்படுத்தப்பட்டவை. எல்லோருக்குமே ஒரு கார்பரேட் கனவு இருக்கிறது. அரசியல் கட்சிகள் முதல் அப்பள வியாபாரிகள் வரை தங்கள் நிறுவனங்களை ஒரு கார்பரேட் போல நடத்தவே முனைகிறார்கள். சந்திரபாபு நாயடு, தனது கட்சியையும் ஆட்சியையும் ஒரு கார்பரேட்டின் தலைமை அதிகாரி போன்றே நடத்தினார் என்பார்கள் (இரண்டுமே மோசமாக வீழ்ந்தன). இந்தியாவில் மென்பொருள் கார்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்க அத்தனைப் போட்டி.
இப்போது கார்பரேட் என்பது ஒரு கனவுக் கூடாரம், உள்ளே நுழைய பலரும் பிரியப்படுகிறார்கள். ஆனால், உள்ளே பல கனவுகள் அடையாளமற்றுப் போகின்றன. ஆனால், பல கனவுகளை, முதற்க் கனவான நிறுவனத்தின் லட்சியத்தோடு இணையச் செய்வதில் தான் கார்பரேட்களின் வெற்றி அடங்கியுள்ளது.
டாக்டர் கேரன் ஓடாஸோ எழுதிய The Truth About Managing Your Career என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் 'வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா' என்ற தலைப்பில் தமிழில்  வெளியிட்டுள்ளது; ஆக்குலர் ரவி மொழி பெயர்த்துள்ளார். புதிதாக வருபவர்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் தயக்கத்தைப் போக்கவும் 'Corporate Induction' என்று ஒரு பயிலரங்கம் நடத்துவார்கள். கல்லூரி முடித்து நிறுவனங்களில் சேர்பவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேருரையே நிகழ்த்துவார்கள். என்ன உடை உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? டை கட்டுவது எப்படி? பெல்ட் போடுவது எப்படி? என்று புறத் தோற்றத்தைப் பற்றி சொல்லுவதோடு, மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்பிப்பார்கள். சுருக்கமாகச் சொல்லுவதானால் "இத்தனை நாள் நீ மனுசனா இருந்துட்ட, இனிமே அப்படி இருக்காத",  இதை சுற்றிவளைத்து மண்டையில் ஏற்றுவார்கள்.
அனுபவங்கள் கற்றுத்தரும் விசயங்களை வேறெதுவும் தர முடியாது. இன்று எதை எதை எப்படிச் செய்வது என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவருகின்றன (Type 'how to' in google search bar and wait 2 secs). எப்படி வேலை செய்வது? என்றே பல புத்தகங்கள் உள்ளன. புதிய வேலைக்கு போகும் ஆர்வத்தில் இந்த புத்தகத்தைப் படித்தேன். பல விசயங்கள் தெரிந்ததுதான்; அனாலும், கேரன் சில சாதாரண விசயங்கள் கூட எப்படி உங்களை மேலேற்றும் என்று விளக்குகிறார். குறிப்பாக உங்கள் மேசையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஃபார்முலாவில் விளக்குகிறார்.
மொத்தம் 60 ஃபார்முலாக்கள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. புது வேலையில் எப்படி இருக்க வேண்டும், சக ஊழியர்களிடம் எப்படி இருக்க வேண்டும், தொடர்புகளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாக தந்துள்ளார். என்றுமே தொடர்புகள் தமாக உருவாவதில்லை, நீங்கள் தான் உருவாக்குகிறிர்கள். மற்றவர்களை வேலைவாங்குவது எப்படி, கூட்டங்களில் எப்படி பேச வேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் சொல்கிறார்.
60 ஃபார்முலாக்களும் உங்களுக்கு பயன் தருபவையே. உங்கள் வேலையில் பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவையே. ஆனால், ஒரு சேர படித்தால் அசதி தான் வருகிறது. ஒரே மாதிரி வார்த்தைகளே அனைத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அங்கங்கே சில எழுத்துப் பிழைகளும் உள்ளன. வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தின் சிறப்பான அட்டை வடிவமைப்பு இதில் இல்லை. மொத்தமாக எதோ 'Rule Book' போல உள்ளது.

Saturday, August 15, 2009

ரத்தன் டாடா





தலைப்பு: ரத்தன் டாடா

எழுத்தாளர்: என்.சொக்கன்

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.75/-

மனிதர்கள் விசித்திரமானவர்கள். சிறிது பலம், சிறிது பணம், சிறிது கல்வி இருந்தாலே அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஆனால், பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர், சிறந்த கல்வி, புகழ் சேர்க்கும் விருதுகள் அனைத்தும் கொண்ட பிறகும் கடுகளவும் கர்வம் இல்லத ஒருவரைக் காண்பது அரிது. பொதுவாக எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் போன்ற பலருக்கு கர்வம் இருக்கும்; சிலருக்கு இன்னும் அதிகமாக தலைக்கனமே இருக்கும். இவை இல்லாத உயர்ந்த மனிதர்கள் உண்டா?

சிறுவயதில் டாடா-பிர்லா என்றால் இருவரும் ஏதோ சகோதரர்கள் எனவும், இருவரும் இணைந்து தொழில் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விவரம் புரிய பல வருடங்கள் எடுத்தது. சரி டாடா வேறு; பிர்லா வேறு. ஆனால் யார் இந்த டாடா? கச்சிதமான முகவெட்டும் ஊடுருவும் புன்னகையும் கொண்ட இந்த மனிதர் யார்? இவர் தான் டாடா நிறுவனங்கள் அனைத்தையும் நிறுவினாரா?

அந்த திறமை வாய்ந்த மனிதர் ரத்தன் நவல் டாடா. சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார், என்.சொக்கன்.

1868 -ல் ஜாம்ஷெட்ஜி டாடா தொடங்கிய ஒரு வர்த்தக நிறுவனம் தான் இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா நிறுவனம். மிகத் திறமையான நிர்வாகிகளாலும் கடுமையான உழைப்பினாலும் உயர்த்தப்பட்டதே டாடா நிறுவனம். டாடா குடும்பத்தில் ஒரு நல்ல பழக்கம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொன் குஞ்சாகக் கருதவில்லை. மாறாக திறமையானவருக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அமெரிக்கவில் பட்டம் பெற்ற ரத்தன் டாடாவைக் கூட ஒரு பயிற்சியாளராகவே டாடா ஸ்டீலில் சேர்த்துக் கொண்டனர். பல வருடம் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடா கூட கடை நிலை ஊழியராகவே பணியில் சேர்ந்தார்.

புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. இதற்கு எழுத்தாளர் என்.சொக்கனைப் பாராட்டியே தீர வேண்டும். கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம். சொக்கனின் எழுத்து நடை அப்படி..

ஆனால், ரத்தன் டாடா எதிர்கொண்ட பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே ஒரு புத்தகம் எழுதினால்தான் உண்டு. நிறுவனப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரத்தன் டாடா, வருங்கால நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக ஒரு புத்தகம் எழுதுவார் என்று நம்புகிறேன்.



Monday, March 23, 2009

அரசூர் வம்சம்


தலைப்பு : அரசூர் வம்சம்
எழுத்தாளர் : இரா.முருகன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175

மேலும் விபரங்களுக்கு...



இது, தமிழில் நான் படித்த முதல் நாவல். தன் பரம்பரையின் துணுக்குகளைக் கொண்டு இக்கதையை ஆசிரியர் அமைத்துள்ளார். கற்பனை கட்டுப்பாடு அற்றது; கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒரு பைசா கூடப் பிரயோஜனப்படாது. அதைக் கட்டுப்படுத்தி, புதிய உலகத்தைப் படைத்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடக்கி, அங்கு நம்மையும் இறக்கி தாம் படைத்த உலகை, மக்களை எழுத்தால் அறிமுகப்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஆனால், அரசூர் வம்சத்தின் கதையை, அலுப்புத் தட்டதவாறு மிகவும் நேர்த்தியான நடையில் இரா.முருகன் படைத்துள்ளார்.


பாத்திரப் படைப்பு:


ஜமீந்தார், சாமிநாதன், சங்கரன், கொட்டக்குடி தாசி, சுப்பம்மாள், கிட்டவய்யன் என்று விதவிதமான கதாப்பாத்திரங்கள்.


ஆட்சி போன பின்பு ஆசை மட்டும் இருக்கும் ஜமீந்தார்; படித்தே பைத்தியமான சாமிநாதன்; இயல்பாய் இருக்கிறாளா, இல்லை இயக்கப்படுகிறாளா என்றே தெரியாத சுப்பம்மாள்; வெண்பா எழுதும் தாசி; என்று வித்தியாசமான கதாபத்திரங்களுக்கு நடுவே எப்போதும் குழம்பிக் கொண்டிருக்கும் சங்கரன்.


பனியன் சகோதரர்கள். முன்னுரையைப் படிக்கும் போது பனியன் சகோதரர்கள், கதை முழுதும் வருவார்களோ என்று தோன்றியது. ஆனால், அவர்கள் வந்துவந்து போகிறார்கள். வரும்போது வில்லங்கத்தோடு வருகிறார்கள், போகும்போது குழப்பிவிட்டுப் போகிறார்கள். வயசனும் சுலைமானும் கதையின் ஓட்டத்தை திருப்பிவிடுகிறார்கள்.


முன்னோர்கள், தம் மக்கள் கூடவே இருக்கிறார்கள். அறிவுரை கூறுகிறார்கள், விவாதிக்கிறார்கள், சுப்பம்மாளைப் படுத்தியெடுத்து நலங்குப்பாட்டுப் பாடுகிறார்கள், சாராயம் கேட்கிறார்கள், அனைத்தையும் சுபமாக்குகிறார்கள். முன்னோர்களைப் பயன்படுத்தியே கதையில் சில மர்மங்களுக்கு விடையளிக்கிறார், எழுத்தாளர். நம் முன்னோர்கள், நம்முடன் பேசுவார்களா?


கொட்டக்குடி தாசியை, எழுத்தாளர் சித்தரிக்கும் விதம் பாராட்டுக்குறியது. அவள் ஒரு சகலகலாவல்லி. ஒரிடத்தில், ஐய்யங்கார் ஜோசியரே, அவளைத் தன் வீட்டுக்கு வரவழைத்து வெண்பா எழுதித்தரக் கேட்கிறார்.


கதையின் அமைப்பு:


இது அரசூரின் கதை. அங்கு வாழ்ந்த ஒரு வம்சத்தின் கதை. எழுத்தாளர், அரசூரின் கதையைச் சொல்லியிருக்கிறார். அம்மக்களை விவரித்திருக்கிறார். நீதியுரைக்கிறேன் என்றோ, நியாய அநியாயங்களைப் பிரித்துக் கூறுகிறேன் என்றோ எழுதவில்லை. தன்னுடைய கதாபாத்திரங்களுடைய விமர்சனத்தை அவர் முன்வைக்கவில்லை. மாறாக கதையோட்டத்திலேயே அவர்களின் இயல்பை விளக்குகிறார்.


கதையின் நடை, ஒரே சீராக இருக்கிறது. சங்கரன், கப்பலில் மாட்டிக்கொள்ளும் போதும், கிட்டவய்யன் மதம்மாறும் போதும், சிறிது மெதுவாய்ப் பயணிக்கிறது. ஆனால், ஆவலைத் தூண்டுகிறது. வசனங்கள் சுருக்கமாகவே எழுதப்பட்டு, பக்கங்களுக்கு இறக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தியுள்ள பல சொற்கள், தற்போது பயன்பாட்டில் இல்லாவிடினும் அர்த்தம் புரிய சிரமமில்லை, கதையின் ஓட்டத்தையும் பாதிக்கவில்லை.


கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, பிராமண சம்பிரதாயங்களை கதையோட்டத்திலேயே சொல்லியுள்ளார். அதிலும் சுந்தர கனபாடிகள் மூலம் திவசம் செய்வதன் அர்த்தத்தை மிக அழகாக கூறியுள்ளார். கிறித்தவர்களின் மதமாற்றப் பிரச்சாரத்தையும், கிட்டவய்யன் பணத்திற்காக மதம் மாறுவதையும் இதமாகவே கூறியுள்ளார். இப்படி மத சம்பந்தமான விஷயங்களை விமர்சிக்காமல் இயல்பாகவே தெரிவித்திருப்பது நன்றாக உள்ளது.


சங்கரன் வீடு அவன் சகோதரனுடன் எரிந்து சாம்பலாகிறது. யார் எரித்தார்கள்? தெரியவில்லை. சங்கரனுக்கு ஜமீன் மீது சந்தேகம். ஆனால், உண்மையில் யார் எரித்தார்கள். கடைசி வரை அதைப் பற்றிக் கூறவேயில்லை. எழுத்தாளரும் முன்னோர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் தெரியவில்லை. கதையின் சுவாரசியத்துக்காகவே வீடு சாமிநாதனோடு எரிக்கப்பட்டதோ? ஆசிரியருக்கே வெளிச்சம்.


ஒரு வருத்தம்:


இன்று தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம். இளைஞர் என்றாலே பாரும்(Bar) பீரும் என்றே ஒரு எழுதாத விதியாகிவிட்டது.


இக்கதையிலும் அப்படித்தான். அனைத்துக் கதாபாத்திரமும் சதாசர்வ காலமும் காமத்தையே சிந்தனை செய்து கொண்டிருக்கின்றன.


சங்கரனுக்கு வாலிப வயது. அவனுக்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் வருவது, இயல்பானது என்று கொள்ளலாம். அவனுக்கு கொட்டக்குடி தாசியின் மீது ஆசை, ராணியின் மீது ஆசை. மனோதத்துவத்தில் Law of Attraction என்று சொல்லுவார்கள். ஒருவன் எதை எப்பொதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ அவன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான். சதாசர்வகாலமும் தேகசுகத்தையே சிந்திக்கும் சங்கரன், சென்னைப் பட்டணத்தில் கப்பலில் வீழ்வதும் காமத்தில் தான்.


ஜமீந்தார், ஐம்பதுக்கு மேல் ஆசை வளர்க்கும் குழந்தை. இவரை சபலபுத்தி ஆட்டுவிக்கிறது. சேடிப் பெண்னையும் மலையாளக் குட்டிகளையும் நினைத்தே காலம் கழிக்கிறார். முன்னோர்களின் புத்திமதிகளைக் கூட அவர் கண்டுகொள்ளவில்லை. அவரே சும்மா இருந்தாலும் அவரைத் தூண்டிவிட்டுக் காரியம் சாதிக்கும் பனியன் சகோதரர்கள்.


பகவதிக்குட்டியின் சகோதரர்கள், கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் இல்லாத சுவாரசியமா? அவர்கள் தேகசாந்தி செய்துகொள்வதையா கூற வேண்டும். இவர்கள் மட்டுமல்ல. இறந்து போய் ஆகாசத்தில் பறக்கும் ஆவிகள் கூட காமத்தையேவா சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். புஸ்தி மீசைக் கிழவன் இறந்த பிறகும் கூட மூத்தகுடிப் பெண்டுகளின் பின்னால் செல்கிறார். இதைக் கற்பனை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, ஏற்றுக்கொள்வது கடினம் தான்.


ஜமீந்தார் பேசும் வார்த்தைகள், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமா என்பதை நீங்கள் படித்தால் தான் சொல்லமுடியும். ஆனால், எனக்கு இதில் சில சொற்கள் சங்கடமானதாகவே இருந்தது. ஒரு சிறந்த கதையை தன்னுடைய சொந்த வாழ்வின் துணுக்குகளில் இருந்து அழகான கதாபாத்திரங்களின் மூலம் வரைந்த இரா.முருகன் மேலே சொன்ன வசனங்களையும் கதாபாத்திரங்களின் சபலமான சிந்தனைகளையும் தவிர்த்திருக்கலாம்.