Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Thursday, September 2, 2010

முத்தொள்ளாயிரம் - என். சொக்கன்



தலைப்பு: முத்தொள்ளாயிரம்
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை
புரியும்படி: என். சொக்கன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
 விலை: ரூ. 150




தமிழ் செய்யுள்களையும் இலக்கியங்களையும் பள்ளியில் மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் கோனார் தமிழ் உரை உதவியதில் சீர் பிரித்துப் படிக்கக் கூட கற்றுக்கொள்ளவில்லை. கோனாரைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் என்னுடைய சோம்பேறித்தனம். சரி சுயபுராணத்தை விட்டுவிட்டு இந்த மூவேந்தர் புராணத்தைப் பார்க்கலாம்.

முத்தொள்ளாயிரம், இந்த தமிழ் நூலைப் பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுதும் கிடைக்கின்றன. மொத்தம் 110 வெண்பாக்கள் உள்ளன (சிலர் 109 வெண்பாக்கள் என்கிறார்கள்). அனைத்தும் சேர, சோழ, பாண்டியரைப் பற்றிய வெண்பாக்கள். ஒரு புலவரே மூன்று அரசர்களைப் பற்றியும் எழுதியிப்பாரா என்பது சந்தேகமே. வேறு வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் எழுதியிருக்காலாம். இந்தப் பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. (மேற்ப்படி தகவல்களூக்கு சில சுட்டிகளை பதிவின் இறுதியில் தந்திருக்கிறேன்.)

பெரும்பாலான பழந்தமிழ் நூல்களைப் போல இதுவும் அரசர்களின் சிறப்புகளை பல உவமைகளைக் கொண்டு சொல்லியிருக்கிறார்கள். முத்தொள்ளாயிரத்தில் பெரும்பாலும் காதற் பாடல்களே உள்ளன. புலவர்கள் தங்களை ஒரு பெண் போல பாவித்துக் கொண்டு இந்தப் பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படி எழுதுவதை கைக்கிளை என்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் காலம் தெரியாவிட்டாலும், அக்காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. என் மூளைக்கு எட்டிய சில விஷயங்களை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.

பெரும்பாலும் அனைத்துப் பாடல்களுமே உவமையோடு தான் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல ஆச்சரியங்கள். எனக்கு பிடித்த ஒரு உவமை. சோழன் வீதியில் வருவதைக்காண பெண்கள் தங்கள் வீட்டு சன்னல் அருகே நிற்கிறார்கள். சோழனைத் தேடும் அவர்களின் கண்கள், வலையில் சிக்கிய மீன்கள் அலைபாய்வதைப் போல் பாய்கிறதாம்.

முத்தொள்ளாயிரக் காலத்தில் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றிய பாடல் இதில் உள்ளது. அரசர்களை முருகனுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பாடலில் இந்திரனும் வருகிறான். ஒரு பாடலில் கடவுளுக்கு விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனைப் பற்றிக் கூறுகையில் ஒரு பாடலில் கோழிக்கொடி ஏந்தியிருப்பவன் என்று வருகிறது. நமக்குத் தெரிந்தவரை முருகன் ஏந்திக்கொண்டிருப்பது சேவற்க் கொடி. ‘கோழி’ என்ற சொல் ஆண்பாலையும் குறிக்கிறதா? இல்லை முருகனின் வேல் மாறிவிட்டதா? தெரியவில்லை.

இந்தக் காதலில் விழுவது என்பது எல்லாக் காலங்களிலும் துன்பம் தான் போலும். எனக்கு அதில் எந்த அனுபவமும் இல்லை. ஆனால், முத்தொள்ளாயிரம் படித்தவுடன் அவர்கள் சொல்வது சரிதானா என்று சோதிக்கத் தோன்றுகிறது. அந்தந்த ஊர்ப் பெண்கள், அவர்களின் அரசர்களின் மீது அநியாயத்திற்கு ஆசை கொள்கிறார்கள் (அந்த ஊர் ஆண்கள் அய்யோ பாவம்!). அரசனைக் கண்டவுடன் அவர்கள் நெஞ்சம் அவன் பின்னாலேயே போய்விடுகிறது. இல்லை இவர்களே நெஞ்சைத் தூதாக அனுப்பிவிடுகிறார்கள். அப்படிப் போன ஒரு நெஞ்சம், பாண்டியனின் வாயிலில், தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவனிடம் பேச காத்து நிற்கிறதாம். இன்னொருத்தியின் நெஞ்சம், யாருக்கும் போக வர வழி கொடாமல் பாண்டியனின் வாயிலில் நிற்கிறதாம். (என்னுடைய மூளை தான் சில நேரங்களில் வேலை செய்வது போல் தெரியவில்லை. எங்காவது போய் வருகிறதோ?)

அப்புறம் சொக்கனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அட! இவர் எந்த ஊர் ராஜாவா? இவர் தான் முத்தொள்ளாயிரத்திற்கு ‘புரியும் படி’ உரை எழுதியிருக்கிறார். நம்மை மூன்று நாடுகளூக்கும் தோளில் கைப்போட்டுக் கொண்டு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் மண்டையில் ஏறும் படி விளக்கம் தருகிறார்; சப்பரம் தெரியாமல் தவிக்கும் குழந்தைகளை தோளில் தூக்கிக் காண்பிக்கும் அப்பாமார்கள் போல (ஆகா! எனக்கும் கூட உவமை எழுத வருகிறதே!). சொக்கன் ஒருவரையும் விடுவதில்லை. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மகளுக்கும் அவள் தாய்க்கும் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். காதல் வயப்பட்டிருக்கும் பேதைகளிடம் போய் விசாரிக்கிறார். யானைகளிடம் கூட பேச்சுக் கொடுக்கிறார். சரி மனிதர் ஏதோ நல்லது செய்கிறார் என்று அவர் பின்னால் போனால், போர்களத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் பேய்களையும் பிணங்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய ஒரு முன்னுரையை மட்டும் எழுத மறந்துவிட்டார் போலும். அதை விரைவில் வரப்போகும் இரண்டாம் பதிப்பில் சேர்த்துவிடுவார் என்று நம்புவோம்.

இந்தப் புத்தகம் மற்ற பழந்தமிழ் நூல்களையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்ப்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சொக்கனின் நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் தான். புத்தகத்தை வடிவமைத்தவருக்கு தாராளான மனம் போலும். எழுத்துக்களை கொட்டி அடைக்காமல், விசாலமாக வடிவமைத்திருக்கிறார்.

மேற்படி தகவல்களுக்கு:

Saturday, February 6, 2010

வேலையில் முன்னேற!




தலைப்பு: வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா
எழுத்தாளர்: டாக்டர் கேரன் ஓடாஸோ
தமிழில்: ஆக்குலர் ரவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்ப்பகம் 
விலை: ரூ.125
மேலும் விபரங்களுக்கு...

இது கார்பரேட் நிறுவனங்களின் காலம். மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதிகமான ஊழியர்கள் இவை மட்டுமே கார்பரேட்களின் அடையாளம் இல்லை. அவர்களின் தொழில்முறை, செயல்முறை, அணுகுமுறை, போன்ற பலவும் முறைப்படுத்தப்பட்டவை. எல்லோருக்குமே ஒரு கார்பரேட் கனவு இருக்கிறது. அரசியல் கட்சிகள் முதல் அப்பள வியாபாரிகள் வரை தங்கள் நிறுவனங்களை ஒரு கார்பரேட் போல நடத்தவே முனைகிறார்கள். சந்திரபாபு நாயடு, தனது கட்சியையும் ஆட்சியையும் ஒரு கார்பரேட்டின் தலைமை அதிகாரி போன்றே நடத்தினார் என்பார்கள் (இரண்டுமே மோசமாக வீழ்ந்தன). இந்தியாவில் மென்பொருள் கார்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்க அத்தனைப் போட்டி.
இப்போது கார்பரேட் என்பது ஒரு கனவுக் கூடாரம், உள்ளே நுழைய பலரும் பிரியப்படுகிறார்கள். ஆனால், உள்ளே பல கனவுகள் அடையாளமற்றுப் போகின்றன. ஆனால், பல கனவுகளை, முதற்க் கனவான நிறுவனத்தின் லட்சியத்தோடு இணையச் செய்வதில் தான் கார்பரேட்களின் வெற்றி அடங்கியுள்ளது.
டாக்டர் கேரன் ஓடாஸோ எழுதிய The Truth About Managing Your Career என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் 'வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா' என்ற தலைப்பில் தமிழில்  வெளியிட்டுள்ளது; ஆக்குலர் ரவி மொழி பெயர்த்துள்ளார். புதிதாக வருபவர்கள் தங்கள் நிறுவனங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் தயக்கத்தைப் போக்கவும் 'Corporate Induction' என்று ஒரு பயிலரங்கம் நடத்துவார்கள். கல்லூரி முடித்து நிறுவனங்களில் சேர்பவர்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேருரையே நிகழ்த்துவார்கள். என்ன உடை உடுத்த வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? டை கட்டுவது எப்படி? பெல்ட் போடுவது எப்படி? என்று புறத் தோற்றத்தைப் பற்றி சொல்லுவதோடு, மற்றவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கற்பிப்பார்கள். சுருக்கமாகச் சொல்லுவதானால் "இத்தனை நாள் நீ மனுசனா இருந்துட்ட, இனிமே அப்படி இருக்காத",  இதை சுற்றிவளைத்து மண்டையில் ஏற்றுவார்கள்.
அனுபவங்கள் கற்றுத்தரும் விசயங்களை வேறெதுவும் தர முடியாது. இன்று எதை எதை எப்படிச் செய்வது என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவருகின்றன (Type 'how to' in google search bar and wait 2 secs). எப்படி வேலை செய்வது? என்றே பல புத்தகங்கள் உள்ளன. புதிய வேலைக்கு போகும் ஆர்வத்தில் இந்த புத்தகத்தைப் படித்தேன். பல விசயங்கள் தெரிந்ததுதான்; அனாலும், கேரன் சில சாதாரண விசயங்கள் கூட எப்படி உங்களை மேலேற்றும் என்று விளக்குகிறார். குறிப்பாக உங்கள் மேசையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு ஃபார்முலாவில் விளக்குகிறார்.
மொத்தம் 60 ஃபார்முலாக்கள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. புது வேலையில் எப்படி இருக்க வேண்டும், சக ஊழியர்களிடம் எப்படி இருக்க வேண்டும், தொடர்புகளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் விரிவாக தந்துள்ளார். என்றுமே தொடர்புகள் தமாக உருவாவதில்லை, நீங்கள் தான் உருவாக்குகிறிர்கள். மற்றவர்களை வேலைவாங்குவது எப்படி, கூட்டங்களில் எப்படி பேச வேண்டும், விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் சொல்கிறார்.
60 ஃபார்முலாக்களும் உங்களுக்கு பயன் தருபவையே. உங்கள் வேலையில் பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவையே. ஆனால், ஒரு சேர படித்தால் அசதி தான் வருகிறது. ஒரே மாதிரி வார்த்தைகளே அனைத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அங்கங்கே சில எழுத்துப் பிழைகளும் உள்ளன. வழக்கமாக கிழக்கு பதிப்பகத்தின் சிறப்பான அட்டை வடிவமைப்பு இதில் இல்லை. மொத்தமாக எதோ 'Rule Book' போல உள்ளது.

Friday, November 20, 2009

1857 சிப்பாய் புரட்சி




தலைப்பு: 1857 சிப்பாய் புரட்சி
எழுத்தாளர்: உமா சம்பத்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.100

வெறுப்பின் முடிவு என்னவாக இருக்கும்?
கோபத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
போர்களின் முடிவு என்னவாக இருக்கும்?
வெறுப்பு, கோபம், போர் இதெல்லம் ஒரே உணர்ச்சியின் பல்வேறு படிமங்கள். இவற்றின் முடிவு இழப்பைத் தவிர ஒன்றுமில்லை. வெறுப்பினால் அமைதி; கோபத்தால் நிம்மதி; போரினால் உயிர் போய்த்தான் ஆகவேண்டும். இவற்றால் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை.
ஆனால், போரைத் தவிர வேறுவழியில்லை அவர்களை அழிப்பதற்கு. எங்கிருந்தோ வந்தார்கள்; வியாபாரம் செய்தார்கள்; நண்பர்கள் ஆனார்கள்; அதிகாரம் செய்தார்கள்; இப்போது அநியாயம் இழைக்கிறார்கள். அகண்ட பாரதமும் அவர்கள் வசம்; கிழக்கிந்திய கம்பெனியிடம். அக்கினிக் குஞ்சுகள் போல் மக்களிடம் இருந்துவந்த வெறுப்பு ஒன்றுகூடி பறங்கியரை எதிர்த்த ஆண்டு 1857. இந்த சிப்பாய்க் கலகம் தான் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைக்கப்படுகிறது.(ஆனால் வேலூரில் 1806 ரிலேயே சிப்பாய்க் கலகம் நடந்தது.)
சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் மதம். கம்பெனியின் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். பன்றிக்கொழுப்பினால் பூசப் பட்ட குண்டுகளை இருமதத்தவரும் ஏற்க மறுத்தார்கள். அதனை எதிர்த்து மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனியாக புரட்சி நடத்தினான்; அவன் அடக்கப்பட்டான். ஆனால், அவன் ஏற்றிவிட்ட நெருப்பு அசுர வேகத்தில் பரவியது. (சிப்பாய்களுக்குள்ளும் மதம் மற்றும் சாதிரீதியான வேறுபாடுகள் நிறையவே இருந்தன.)
பல்வேறு அரசர்களும் ஆங்கிலேயர்கள் மீது கடுப்பில் இருந்ததால் சிப்பாய்களுக்கு உதவி கிடைப்பதில் சிக்கல் இல்லை. போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது அது மே 31, 1857. ஆனால், மீரட்டில் முன்னதாகவே தொடங்கியது. வெறுப்பின் உச்சத்திலிருந்த சிப்பாய்கள் வெள்ளைக்காரர்களைக் கொன்று குவித்தார்கள். இங்குதான் புரட்சியின் குரூர முகம் தொடங்கியது. புரட்சியாளர்களின் குறி வெள்ளை உயிர்களாக மட்டுமே இருந்தன. பெண்கள் குழந்தைகள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அவர்களின் ஆத்திரம் அவர்களைச் செலுத்தியது.
மீரட்டிலிருந்து தில்லி சென்று பின்னர் ஊர் ஊராகப் பரவியது புரட்சி. வெள்ளையர்கள் ஆட்டம் கண்டார்கள். ஆனால், அனைத்து சிப்பாய்களும் புரட்சியில் இல்லை. சீக்கியப் படைகள், கூர்காப் படைகள் என சில படைகள் ஆங்லேயருக்கு மிக விசுவாசமாக நடந்துகொண்டன. கடைநிலை ஊழியர்கள் காட்டிய விசுவாசமே வெள்ளையர்களை வாழவைத்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு கோட்டை முற்றுகையின் போது 24 மணிநேரத்தில் ஒரு கிணறையே சீக்கியச் சிப்பய்கள் தோண்டியதாக கூறப்படுகிறது. புத்தகத்தின் இறுதியில் உள்ள ரஸ்ஸெல் என்னும் ஆங்கில பத்திரிக்கையாளரின் குறிப்பு இதைத்தான் சொல்கிறது "கடைநிலை இந்திய ஊழியர்களின் ஆதரவினால் தான் ஆங்கிலப்படை தாக்குபிடித்தது."
புரட்சியாளரகள் தாமாக கிளம்பிவிடவில்லை. அவர்களுக்கு பின் பல பெரிய தலைகள் இருந்தன. நானா சாகிப், தாத்தியா தோப்பி, குன்வர் சிங், ஜான்சியின் லட்சுமி பாய், மெளல்வி அகமது ஷா போன்று பலர் புரட்சியினை வழிநடத்தினர். ஆனால் இதில் நானா சாகிப், தோல்விக்கு பிறகு தனக்கும் புரட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதில் ஜான்சி ராணியை பலருக்கும் தெரிந்திருக்கும். தன்னுடைய இருபது வயதில் ஒரு பெரிய புரட்சி செய்தவள். தாத்தியாவும் குன்வர் சிங்கும் சிப்பாய்ப் புரட்சியில் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனம். இவர்களின் வீரம் ஆங்கிலேயர்களுக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியது.
பல்வேறு இழப்புகளை இருதரப்பும் சந்தித்தது. ஆயிரக்கணக்கன உயிர்கள், ஏராளமான பொருளிழப்பு; வெறுப்பின் விளைவு இந்த இழப்புகள் மட்டும்தான். ஒவ்வொருவராக புரட்சி தலைவர்கள் வீழ்ந்தார்கள், புரட்சியின் வேகம் குறைந்து, மீண்டும் கிழக்கிந்திய் கம்பெனியிடமே ஆட்சி வந்தது. ஆனால் முடிவில் சிறு மாற்றம்; ஆட்சி அனைத்தும் இப்போது இங்கிலாந்து ராணியின் கீழ் வந்துவிட்டது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனி இன்னும் போகவில்லை; அதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எழுத்தாளர் உமா சம்பத் சிப்பாய்ப் புரட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் தந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால், இது வரலாற்று புத்தகமா, இல்லை ஒரு கதையாக கூறமுற்பட்டுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் இப்புத்தகம் 1857 சிப்பாய் புரட்சியின் ஒரு எளிய அறிமுகமாகவே இருக்கிறது. தொடந்து போர்களாக வருவதால் பாதியிலேயே அலுப்புதட்டுகிறது. அதற்கு கண்டிப்பாக எழுத்தாளரைக் குறை கூற முடியாது.
ஒரு வரலாற்று புத்தகம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தகத்தில் பல போர்களின் காலம் துல்லியமாக தரப்படவில்லை. காலவரிசைப் பட்டியலும் (Timeline) இணைக்கப்படவில்லை. மேலும் ஆங்கில நூல்களில் உள்ளது போன்று அகரவரிசையில் வகுகப்பட்ட (Index) சொற்கள் இல்லை. இதனால் இப்புத்தகத்தை Reference ஆக பயன்படுத்துவது கடினம். இவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Saturday, August 15, 2009

ரத்தன் டாடா





தலைப்பு: ரத்தன் டாடா

எழுத்தாளர்: என்.சொக்கன்

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ.75/-

மனிதர்கள் விசித்திரமானவர்கள். சிறிது பலம், சிறிது பணம், சிறிது கல்வி இருந்தாலே அவர்களைக் கையில் பிடிக்க முடியாது. ஆனால், பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர், சிறந்த கல்வி, புகழ் சேர்க்கும் விருதுகள் அனைத்தும் கொண்ட பிறகும் கடுகளவும் கர்வம் இல்லத ஒருவரைக் காண்பது அரிது. பொதுவாக எழுத்தாளர்கள், சாதனையாளர்கள் போன்ற பலருக்கு கர்வம் இருக்கும்; சிலருக்கு இன்னும் அதிகமாக தலைக்கனமே இருக்கும். இவை இல்லாத உயர்ந்த மனிதர்கள் உண்டா?

சிறுவயதில் டாடா-பிர்லா என்றால் இருவரும் ஏதோ சகோதரர்கள் எனவும், இருவரும் இணைந்து தொழில் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். விவரம் புரிய பல வருடங்கள் எடுத்தது. சரி டாடா வேறு; பிர்லா வேறு. ஆனால் யார் இந்த டாடா? கச்சிதமான முகவெட்டும் ஊடுருவும் புன்னகையும் கொண்ட இந்த மனிதர் யார்? இவர் தான் டாடா நிறுவனங்கள் அனைத்தையும் நிறுவினாரா?

அந்த திறமை வாய்ந்த மனிதர் ரத்தன் நவல் டாடா. சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார், என்.சொக்கன்.

1868 -ல் ஜாம்ஷெட்ஜி டாடா தொடங்கிய ஒரு வர்த்தக நிறுவனம் தான் இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா நிறுவனம். மிகத் திறமையான நிர்வாகிகளாலும் கடுமையான உழைப்பினாலும் உயர்த்தப்பட்டதே டாடா நிறுவனம். டாடா குடும்பத்தில் ஒரு நல்ல பழக்கம், அவர்கள் தங்கள் பிள்ளைகளை பொன் குஞ்சாகக் கருதவில்லை. மாறாக திறமையானவருக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அமெரிக்கவில் பட்டம் பெற்ற ரத்தன் டாடாவைக் கூட ஒரு பயிற்சியாளராகவே டாடா ஸ்டீலில் சேர்த்துக் கொண்டனர். பல வருடம் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி டாடா கூட கடை நிலை ஊழியராகவே பணியில் சேர்ந்தார்.

புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா நிறுவனத்தின் வரலாற்றையே விவரமாகத் தருகிறது. இதற்கு எழுத்தாளர் என்.சொக்கனைப் பாராட்டியே தீர வேண்டும். கவனத்தைக் குவித்துப் படித்தால், இரண்டு மணிநேரத்திலேயே புத்தகம் முழுவதையும் படித்துவிடலாம். சொக்கனின் எழுத்து நடை அப்படி..

ஆனால், ரத்தன் டாடா எதிர்கொண்ட பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே ஒரு புத்தகம் எழுதினால்தான் உண்டு. நிறுவனப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ரத்தன் டாடா, வருங்கால நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக ஒரு புத்தகம் எழுதுவார் என்று நம்புகிறேன்.



Saturday, April 18, 2009

மக்களாகிய நாம்...


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...



கவிஞர் புலமைப்பித்தன்
உன்னால் முடியும் தம்பி (1988)
----------------------------------------------------------------------------------


இந்தப் பாடல் எழுதப்பட்டு இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இந்தஇருபது ஆண்டுகளில் மேலே கூறப்பட்ட நிலைமையில் எந்த மாற்றமும்இல்லை. பஞ்சமும் பசியும் சாராயமும் ஒன்றை ஓன்று விஞ்சி வளர்ந்துகொண்டிருக்கின்றன. யானை கொண்டு போர் அடித்த நாட்டில் இன்று, பசிவயிற்றில் அடிக்கிறது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் போராடி விழுந்த இடத்தில், எழுந்தவர்கள் எல்லாம் சாராயக் கடையில் சுதந்திரம் வளர்க்கிறார். நீதி ஆண்டஇடத்தில், சாதி ஆள்கிறது. இவையெல்லாம் கேடு விளைவிக்கும் என்பதுஅனைவருக்கும் தெரியும். ஆனால், இவற்றின் விளைவுகள் எத்தகயது என்றவிவரங்களும் அவற்றை தீர்க்க வேண்டிய செயல்பாடுகளும் சாதாரனமக்களுக்குத் தெரியாது. இவை தெரியாமல் அவர்களால் பிரச்சனைகளின்தீவிரத்தை உணர முடியாது. எத்தனை மக்களுக்கு பிரச்சனைகளின் தீவிரம்உணர்த்தப்படுகிறதோ, அத்தனை சீக்கிரம் அவை விலகும்.


அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப அறிக்கைகளின் மூலம் பொய்மூட்டைகளையே கட்டவிழ்த்துவிடுகின்றன. ஊடகங்களும் பெரும்பாலும் ஒருசார்பு நிலையையே எடுக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில், மக்கள்பிரச்சனைகளைப் பற்றி ஒருவர் கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர், அ.கி.வேங்கட சுப்ரமணியன். இவர், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. வேங்கடசுப்ரமணியன் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, மக்களாகிய நாம் என்னும்தலைப்பில் ஒரு நூலாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


மொத்தம் 28 கட்டுரைகள்; குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என்னும்நான்கு தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளன.


குடியாட்சி:

இந்தப் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் எழுத்தாளர், சமத்துவம், மது விலக்கு, விவசாயம், காவல்துறை போன்றவற்றின் தற்போதய நிலைமையைப் பற்றியும்அவற்றை சீர்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் விரிவாகக்கூறியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகளில் மகாகவி பாரதியாரின் கவிதைளைபயன்படுத்தியதோடு நில்லாமல், 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா?' என்ற கட்டுரையில் பாரதியாரின் சுதந்திரப் பள்ளுவையும் நமது தற்காலநிலையையும் ஒப்பிட்டுள்ளார்.


யாருக்கு வரவு? யாருக்கு செலவு? என்ற கட்டுரை, கண்டிப்பாக படிக்க வேண்டியஒன்று. சாதாரணமாக அனைவருக்கும் புரியும்படி, விவசாயிகள் எந்த அளவிற்குபாதிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கியுள்ளார். அரசின் வருமானம், அரசுஊழியர்களின் வருமானம், பியட் காரின் விலை போன்றவை பல மடங்குஅதிகரித்த போதும் விவசாயப் பொருட்களின் விலை அந்த அளவிற்குஉயரவில்லை. இதற்கு காரணம், மற்ற துறைகளைப் போல் விவசாயத்திற்குபோதிய அளவு அரசாங்கம் கட்டமைப்புகளை மேம்படுத்தாததே காரணம்- இவையே விவசாயிகளின் வறுமைக்குக் காரணம்.


உள்ளாட்சி:


ஊராட்சிகள் ஈட்டியின் கூர்முனைகள் என்று குறிப்பிட்டுள்ள வேங்கடசுப்ரமணியன், அவற்றைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தைத் தர முடியும் என்றுகூறுகிறார். உள்ளாட்சிகளில் கட்சிகள் தேவையே இல்லை என்பதே இவர் வாதம். கட்சிகளின் தலையீடு இல்லாமல், நேர்மை, திறமை, எளிமை, துணிவு கொண்டஒரு குடிமகனையே உள்ளாட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், கட்சிகளின் பதவி வெறி உள்ளாட்சி அமைப்புகள் வரை படர்ந்துள்ளது குறித்துகவலையும் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு ஆட்சிகளிலும் மாநகராட்சித் தேர்தல்களில் நடந்த வன்முறைகள்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் என்பது, சட்டமன்றதேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர்கள் தங்கள் மானத்தை மீட்கவும், சிலகைத்தடிகள் கட்சித்தலைமையிடம் நல்ல(?) பெயர் வாங்கவும், ஆளும் கட்சிதனது கொடுரமான முகத்தைக் காட்டவுமே நடத்தப்படுகிறது. 2007-ம் ஆண்டுசென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்மறுதேர்தல் நடந்தது. மாநகராட்சி சார்பில், மக்களை பயமின்றி வாக்களிகக்கோரி, தேர்தல் நாளன்று அறிவுப்பு செய்த போதும் கூட 30% வாக்குகளேபதிவானது. அரசியல் கட்சிகளின் இந்த கொடுர நோக்கத்தால் மக்கள் நம்பிக்கைஇழக்கும் அபாயத்தை இந்த கட்டுரைகள் சுட்டுகின்றன.


மக்களுக்கு நெருக்கமான நிலையில் உள்ள போதும், உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிகாரங்கள் மிகவும் குறைவு. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும்கையோடு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முயற்சி செய்யும் போதே உள்ளாட்சிஅமைப்புகளின் நிலைமை புரிந்திருக்கும். உள்ளாட்சி அமைப்புகளின்அதிகாரங்களை படிப்படியாக உயர்த்துவதன் மூலமே மக்களுக்கு சிறந்தநிர்வாகத்தின் பயனை அளிக்க முடியும்.


கல்வி:


அனைவருக்கும் கல்வி அளிப்பதில் உள்ள பிரச்சனைகள் இத்தொகுதியில்ஆராயப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கல்வி வரி பற்றியது. இப்படி ஒரு வரிஇருப்பது பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த போதும், அவை கல்விக்காகச்செலவழிக்கப்படுகிறதா? என்று நாம் சிந்தித்த்துண்டா? அதைப் பற்றி இருகட்டுரைகளில் விரிவாகக் கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும்கல்வி வரிகள், தொடக்கக் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டியவை. ஆனால் அவை தொடக்கக் கல்விக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதைதகவல் அறியும் சட்டம் மூலமாகவே எழுத்தாளர் அறிந்துள்ளார். இதைப் பற்றிநாம் யோசனை செய்வதே இல்லை. இந்தப் போக்கு மாற வேண்டும். நாம்செலுத்தும் வரிகள் சரியான நோக்கத்திற்கு பயன்படுகிறதா? என்றுகண்காணிப்பதும் நமது கடமை தான்.


தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா? என்ற கட்டுரையில் நுழைவுத் தேர்வுரத்து செய்வதால் மட்டுமே கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மற்றும்மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்பதை புள்ளிவிபரங்கள் மூலம்விளக்கியுள்ளார். கிராமப்புற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகஇருப்பதால், அவர்களின் மேற்ப்படிப்பே கேள்விக்குறியாக இருப்பதே உண்மை. ஆனால், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளாமல், நுழைவுத்தேர்வை மட்டும் ரத்து செய்வது, ஒரு பயனையும் தராது என்பதே வேங்கடசுப்ரமணியன் அவர்களின் கருத்து.

வாழ்க்கை:


இதில், நெலசன் மண்டேலாவின் வாழ்க்கையை சில பக்கங்களில் தந்துள்ளார்எழுத்தாளர். சில பக்கங்களே ஆனாலும் கூட அவர் வாழ்க்கை முழுதும்கட்டுரையில் தந்திருப்பது, வேங்கட சுப்ரமணியன் அவர்களின் எழுத்துத் திறனின்மேன்மையைக் காட்டுகிறது.

புத்தக விபரங்கள்:








தலைப்பு: மக்களாகிய நாம்… எழுத்தாளர்: அ.கி. வேங்கடசுப்ரமணியன் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.100/-
மேலும் விபரங்களுக்கு...



பத்ரிக்கு ஒரு வேண்டுகோள்: இப்புத்தகத்தை மலிவு விலைப் பதிப்பிலும் வெளியிட்டால் , இக்கருத்துக்கள் அதிகமான மக்களிடம் போய்ச்சேரும்.