Wednesday, May 11, 2011

தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டம்


மேலே படிக்கும் முன் உங்களைக் கொஞ்சம் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள். சட்டசபையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையை அப்படியே மனத்தில் காட்சியாய் ஓட விடுங்கள்.

தற்சமயம் முதல்வராக இருவரை மட்டுமே நம்மால் நினைத்து பார்க்க முடியும் என்பதால், அந்த இருவரில் உங்களுக்கு பிடித்தவர் அல்லது பிடிக்காதவர் இங்கு முதல்வாராக சட்ட வரைவை வாசிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

காலை மணி 10.10.

ஆளுங்கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். தான் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாத ஒரு உறுப்பினர் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கிறார்.

சபாநாயகர்: தொலைக்காட்சி தொடர் காணும் உரிமைச் சட்டத்தை சபையில் தாக்கல் செய்ய மாண்புமிகு முதல்வரை அழைக்கிறேன்.

ஓவர் டூ முதல்வர்:

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

பெண்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் எனது அரசு எப்போதும் பாடுபட்டுவந்திருக்கிறது. அதற்காக நான் சந்தித்த எதிர்ப்புகளும் சோதனைகளும் அதிகம். ஆனால் இந்த எதிர்ப்புக்கு பயப்படாமல், சதாசர்வகாலமும் மக்களுக்காகவே சேவை செய்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பெண்களுக்காக இந்த அரசு வகுத்திருக்கும் திட்டங்களும் சட்டங்களும் எதிர்கால வரலாற்றில் கூட யாராலும் செய்ய முடியாதது.

(ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டுகிறார்கள்)

சட்டத்தின் முக்கிய அம்சங்களை இந்த சபையில் பட்டியலிடுகிறேன்.

  • இந்த சட்டம் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு குறைந்தது 10 மணிநேரம் தொலைக்காட்சி நேரத்தை உறுதி செய்கிறது. அதிலும் ப்ரைம் டைம் என்று அழைக்கப்படும் மாலை 6 மணி முதல் 11 மணி முழுவதும் அவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
  • இந்த நேரத்தில் அவர்களை சமையல் செய்யச் சொல்லுதல், சாப்பாடு பரிமாறச் சொல்லுதல் போன்றவை குற்றமாகக் கருதப்படும். இடையிடையே கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க அவர்களை தொந்தரவு செய்வது, விளம்பர இடைவேளையின் போது ரிமோட்டை கைப்பற்றுவது போன்றவை இனிமேல் குற்றமாக பதிவு செய்யப்படும்.
  • இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் மூன்று நாள் சிறைத் தண்டனையும் தண்டனை காலத்தின் போது நாளொன்றுக்கு 10 மணி நேர தொலைக்காட்சி தொடர்களும் காண்பிக்கப்படும்.
(இப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்னும் பலமாக மேசையை தட்டுகிறார்கள்.)
  • குற்றவாளிகளை அரசு போஷிக்கிறது என்ற அவப்பெயரை என் அரசு தாங்காது. அதனால் சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் குற்றவாளிகளிடமிருந்தே சிறை வாடகை வசூலிக்கப்படும்.
  • நல்ல கதை புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, கைவினைக் கலைகள், இசை, மொழி போன்றவற்றை கற்க ஆர்வத்தை தூண்டுவது, இதனால் மரியாதை, மதிப்பு, அறிவு எல்லாம் உயரும் என்று ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சி தொடர்கள் பார்க்கும் பழக்கத்தையும் உரிமையையும் வேரோடு அழிக்க நினைப்பவர்களை இந்த அரசு தயவுதாட்சன்யம் இன்று தண்டிக்கும்.
  • இத்தகைய குற்றங்களில் ஒருவர் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும். அதற்கான சிறைவாடகையும் வசூலிக்கப்படும்.
  • மேலும் தண்டனை காலம் முடிந்தபின் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தினமும் மாலை 7 மணிக்கு ஆஜராகி, 7 மணி முதல் 9 மணி வரை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் தொலைக்காட்சி தொடர்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.
  • இவ்விதமான ஏற்பாடுகள் குற்றவாளிகள், மீண்டும் குற்றம் புரிவதையும் மற்றவர்களின் உரிமையில் தலையிடுவதையும் தடுக்கும்.
  • இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களை பதிவு செய்ய, காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் தங்கள் அலைபேசியில் இருந்து TV <பெயர்> <குற்றம் சாட்டப்படுபவரின் பெயர்> <அவர் முகவரி> என்று டைப் செய்து பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் (00000) என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். மற்றவற்றை எனது அரசு இயந்திரம் பார்த்துக் கொள்ளும். 
(தொடர்ந்து இரண்டு நிமிடம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத்      தட்டுகிறார்கள்.)                                                       


Wednesday, May 4, 2011

எழுத்து எங்கிருந்து வருகிறது?

எலிசபெத் கில்பர்ட்டை பலருக்கும் தெரிந்திருக்கும்; Eat Pray Love என்ற புத்தகத்தை எழுதியவர். பல வருடங்கள் பல நாடுகளில் பெஸ்ட் செல்லராக இருந்த புத்தகம் அது. கற்பனைத் திறனைப் பற்றி அவர் அளித்த Ted Talkல் இரு கலைஞர்களை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவர் 95 வயதாகும் அமெரிக்க கவிஞர் ரூத் ஸ்டோன். மற்றொருவர் டாம் வெயிட்ஸ் (ஆம் Tom Waits தான். ஏதோ வாக்கியம் போல் இருக்கிறது தானே). வெயிட்ஸ் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர்.

ரூத் ஸ்டோன், "கவிதை பூமி அதிர என்னை நோக்கி ஓடி வரும்; அதோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடிப் போய் ஒரு தாளையும் பென்சிலையும் எடுத்து எழுதிவிடவேண்டும். சில நேரங்களில் கவிதையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது; பேப்பரையும் பென்சிலையும் அடையும் முன்பே கவிதை வேறு ஒரு கவிஞரைத் தேடி ஓடிவிடும். வேறு சில சமயம் கவிதை என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்; ஒரு கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கவிதையின் வாலைப்பிடித்து எழுத்து அப்படியே பேப்பரில் எழுதிவிடவேண்டும். கவிதை முழுமையாக கச்சிதமாக வந்துவிடும்; ஆனால், வலைப்பிடித்து இழுத்ததால் கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கி முதல் வார்த்தையில் முடியும்.”

அடுத்தது டாம் வெயிட்ஸ், ” ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அந்த மெலடி கேட்கிறது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது வேண்டும். ஐயோ! அதை தான் இழக்கப்போகிறேன்! இதை விட்டுவிட்டால் என்றென்றும் அந்த வருத்தம் என்னை குத்திக் கொண்டே இருக்கப்போகிறது” இதைத் தொடர்ந்து அவர் செய்தது தான் க்ளாசிக், காரிலிருந்து இறங்கி, மேலே பார்த்து “ஏய்! நான் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? இப்போ நான் பாட்டு எழுதும் நிலையிலா இருக்கிறேன். போ! உனக்கு வாழ்வு வேண்டுமானால் வேறு ஒரு சரியான சந்தர்ப்பத்தில் வா. இல்லை இன்றைக்கு வேறு யாரையாவது போய் தொந்தரவு செய். போய் லியோனார்ட் கோகனை தொந்தரவு செய்.”

பதிவுன் கடைசியில் இருக்கும் ஒளித்துண்டைப் பாருங்கள். மிக நல்லதொரு Ted Talk.

எலிசபெத் சொல்வது, ‘எழுத்து என்பது நமக்கு உள்ளே உருவாவதில்லை, அது நமக்கு வெளியில் இருக்கிறது. அதோடு நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பதே.

இதே போன்ற கருத்தைதான் தமிழின் முதன்மை எழுத்தாளர்களான லா.ச.ராவும் தி.ஜானகிராமனும் சொல்கிறார்கள்.

முதலில் லா.ச.ரா...

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

'' கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'


தி.ஜா...

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.


எலிசபெத் கில்பர்ட்டின் பேச்சு...