Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Friday, October 14, 2011

லூசுத்தனமான வாழ்க்கை

காலைல எழுந்த உடனே ஒரே எரிச்சல். எத்தனை மணிக்கு தூங்கி எத்தனை மணிக்கு எழுந்தாலும் அதே எரிச்சல். பல் தேச்சு சில்லறையத் தேடிப் பிடிச்சு பால வாங்கி காப்பி போட்டு, அத நானே குடிச்சு. என்ன வாழ்க்கைடா இது!

எவ்வளவு நேரம் தூங்கினாலும் சோர்வா தான் இருக்கு. அதுல இந்த டாக்டர் பத்ராவோட தொந்தரவு வேற. காலங்காத்தால மூணு மணிக்கு SMS. 'Don't Take your hair fall Easy' யாம். அது இருந்தா என்ன போனா என்ன. காலங்காத்தால மூணு மணிக்கா இதுக்கெல்லாம் கவலைப்பட முடியும்.

எடுத்த வேலையெல்லாம் முடிக்காம அப்படியே இருக்கு. எந்த வேலையையும் சொன்ன தேதியில முடிச்சு கொடுத்ததே இல்ல. தெரிஞ்சவன் தெரியாதவன் எல்லாரும் கேட்டாச்சு ‘ஏன் எப்போதும் சீரியஸாவே இருக்க?’ நான் நார்மலா இருந்தாலே அப்படித்தான் இருப்பேன்னு எத்தன பேர்கிட்ட தான் விளக்கம் கொடுக்க? ஒரு தடவ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனேன். அந்த போட்டோ கிராஃபர் தொடர்ந்து மூணு தடவ திரும்பத் திரும்ப ‘smile sir' னு சொல்லிக்கிட்டே இருந்தார். அவர் மூணாவது தடவ சொல்லும் போது எனக்கு கோவம் வந்திடுச்சு. ‘இவ்ளோ தான் எடுங்க எடுங்க’. நியாயமா அந்தாளுக்குத் தான் கோவம் வந்திருக்கணும்.

இந்த self-control விஷயத்துல ரொம்பவே மோசம். ஏதாவது ஒன்னு செய்யணும்னு நினச்சுப்பேன் ஆனா செய்யமாட்டேன். மறதியெல்லாம் இல்லை. முழுச் சோம்பேறி ப்ளஸ் மனம் போன போக்குல போறது. இதைச் சொன்னா 'மனத்தை ஏன் அடக்கணும். தும்மல அடக்குவியா? விக்கல அடக்குவியா? அத அடக்குவியா? இத அடக்குவியா? அதே மாதிரி மனசையும் அடக்க கூடாது. அதுபாட்டுக்கு அலையவிட்டு வேடிக்கை பாரு'ங்கறாய்ங்க. 

ஐயா சாமி மனச அடக்கணும்னு யாரு சொன்னா? கவனத்தை குவிக்கணும்னு தான சொல்றாங்க. அனுஷ்கா பத்தி நினைக்கும் போது அனுஷ்கா நினைவு வந்தா தப்பில்லை. ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயி ‘கடவுளே! எனக்கு மட்டுமாவது நல்ல புத்திய கொடு’ன்னு ஒரு முக்குல உக்காந்து உருகும் போது அனுஷ்கா நினைப்பு வந்தா எரிச்சல் வருமா வராதா? இல்ல, உங்க மேனேஜர் சீரியஸா ஒரு விஷயம் பேசறார், ஒரு வார்த்த ‘ட்விட்டர்’னு சொல்லிட்டார். உடனே உங்க மனம் உங்க ட்விட்டர் ஐகான நினைவுல கொண்டுவந்து, அதுலேர்ந்து முந்தின நாள் ட்விட்டர்ல படிச்ச ஜோக்குக்கு போயி, அதுக்கு நீங்க இப்போ சிரிச்சு, அத உங்க மேனேஜரும் பார்த்தா எரிச்சல் வருமா வராதா? இதுக்கு தான் சொல்றேன் மனச கட்டுப்படுத்தணும். ஆனா என்னால முடியல.

அதுக்கடுத்தது அறிவுப் பிரச்சனை. பதினாறாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதாதா. இதப் படிப்போமோ அதப் படிப்போமான்னு சதா எதையாவது தேடிக்கிட்டு. யாருக்கு யாரு மகாகவியா இருந்தா எனக்கென்னனு சும்மாயிருக்கா. சில சமயம் தேவையானத படிக்கிறத விட தேவையில்லதத தான் அதிகமா படிக்கிறேன். 

இந்த Time Sheet எல்லாம் போட்டுப் பார்த்தா எவ்வளவு நேரம் வீணடிக்கிறேன்னு தெரிஞ்சுக்கலாம்தான். தெரிஞ்சு என்ன செய்ய? சரி கூடவே ஒரு டுடு லிஸ்ட் வெச்சுகிட்டா நல்லாயிருக்கும்ல? இருக்கும் தான். தொடர்ந்து ரெண்டு நாளைக்கு மேல அத ஃபாலோ பண்ணுவேன்ற நம்பிக்கை எனக்கில்லை.

இதப்பத்தி மத்தவங்க கிட்ட பேசினா சிலர், ‘இந்த வயசுல உனக்கென்னைய்யா என்ஜாய் பண்ணு’ன்றாங்க. இன்னும் பலர் ‘கல்யாணம் பண்ணிக்கோ கவலையெல்லாம் போயிடும்’னு சொல்றாங்க. கொஞ்சம் வயசு குறைஞ்சவங்ககிட்ட கேட்டா ‘Go get a girlfriend'டாம். அதுக்கெல்லாம் இந்த மூஞ்சிய வெச்சுகிட்டு நானெங்கே போறது. தெருத்தெருவா அலைய வேண்டியது தான்.

இந்தப் பதிவு மாதிரி என்னென்வோ பண்றேன், ஏதாவது நடந்து உள்ளொளியோ உள்ளெலியோ பட்டுனு ரெண்டுல ஒன்னு வெளியே வந்துட்டா பரவாயில்ல. ம்ம்... பாப்போம்.

Friday, August 13, 2010

நொட்டாங்கை


இந்தா, இத அவர்கிட்ட கொடு...
இந்தாங்க...
ஏல! எப்பவும் இடதுகைதானா? வலது கையால கொடுடா...
என்னங்க, தம்பிக்கு இடதுகை பழக்கமா? எனக்கு கூட இடதுகை பழக்கம் தான் (அவருக்கு அவ்வளவு சந்தோஷம்)... தம்பிக்காக அஞ்சு ரூபா குறைச்சுக்கறேன்.
ஐம்பது ரூபா ஜால்ராவுக்கு அஞ்சு ரூபா தள்ளுபடி; நம்ம லேண்ட்மார்க் மாதிரி 10% தள்ளூபடி. அந்த தம்பி நாந்தேன், அப்புறம் அந்த கடை மதுரையில் எதோ ஒரு ரத வீதியில் இருக்கு. அதுவரைக்கும் எனக்கு மட்டும் தான் அப்படி ஒரு பழக்கம் இருக்குன்னு நினைத்திருந்தேன். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 13ம் தேதி இடதுகை பழக்கமுடையவர்கள் தினம் கொண்டாடுகிறார்கள் (யார் கொண்டுகிறார்கள் என்பது தெரியவில்லை, யாராவது நல்ல புத்திசாலி வியாபாரியா இருக்கலாம்). அந்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக்கிறேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.
நான் முதலில் குச்சி பிடிச்சு எழுத ஆரம்பிச்ச அப்போ, இடது கையால் எழுத ஆரம்பிச்சேன். அம்மா குச்சியை பிடுங்கி வலது கையில் கொடுத்தாங்க. கொஞ்ச நேரம் வலது கையில் எழுதிட்டே இருப்பேன்; எப்படித்தான் மாறுமோ தெரியாது, ஆனா இடதுகைக்கு குச்சி மாறிடும். எங்க மைதிலி டீச்சர், அதான் எங்க எல்.கே.ஜி டீச்சர், முதல்ல திட்டினாங்க; அப்புறம் அடிச்சாங்க. ஆனா என்னால மாத்திக்கவே முடியல. சரி எப்படியோ தொலைஞ்சு போன்னு எல்லாரும் விட்டுட்டாங்க.
இந்த இடதுகை பழக்கம் எதனால் வருதுன்னு ஏகப்பட்ட பேர் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஒரு பிரபலமன தியரிப்படி, நம்ம மண்டைக்குள்ள மூளை மூளை அப்படின்னு ஒன்னு இருக்குமாம். அது வலது பக்கம் இடது பக்கம்னு இரண்டு பிரிவா இருக்குமாம். இடது பக்க ஆதிக்கம் அதிகமா இருந்தா வலதுகை பழக்கமும், வலது பக்க ஆதிக்கம் அதிகம் இருந்தா இடதுகை பழக்கமும் வருமாம். இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது.
இன்னொரு தியரிப்படி அம்மாவோட தொப்பைகுள்ள இருக்கும் போது எந்த கை நம்ம வாய்க்கு பக்கத்தில் இருக்குகோ அந்த கை பழக்கம் வருதாம். இன்னொருவர் கரு உருவாகும் போது  அதிக டெஸ்டோஸ்டீரோன் சுரந்தால்  இடது மூளை அவ்வளவா வளராதுன்னு சொல்றார். அதனால வலது மூளை ஆதிக்கம் அதிகமாயிடுமாம். அப்புறம் வழக்கமா சொல்லற ஒரு பதில். எல்லாமே டி.என்.ஏ-க்கு ள்ள தான் இருக்குனு சொல்லிட்டு, இப்போ இருக்கா  இல்லையான்னு  ஆராய்ச்சி  பண்ணறாங்க. (நன்றி: விக்கிபீடியா)
நான் சுமார் 99% வேலைகளை இடதுகையால் தான் செய்கிறேன்; சாப்பிடுவது தவிர. சிலர் சாப்பாட்டையும் இடதுகையால் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். சிலர் சில வேலைகளுக்கு மட்டும் இடதுகையை பயன்படுத்துவார்கள். ஓர் எளிய உதாரணம், சச்சின். சச்சின் இடதுகையால் எழுதுவார்; ஆனால், வலதுகையால் தான் பந்துவீசுவார். சிலர் வேண்டுமென்றே இடதுகை பழக்கத்திற்கு மாறுவார்கள். டென்னிஸ் வீரர் ரபேல் நாடல், அப்படி மாறியவர் தான். பெரும்பாலும் அனைத்து வீரர்களும் வலதுகை வீரர்களை எதிர்த்தே பயிற்சி செய்வார்கள். அப்படி பயிற்சி செய்தவர்களுக்கு எதிராக இடதுகையில் ஆடுவது லாபம்.
இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லா உபகரணங்களும் வலதுகை பழக்கத்தை மட்டுமே மனதில் கொண்டு அமைக்கப்படுகின்றன. கத்திரிக்கோல், கம்ப்யூட்டர் மவுஸ்,  கதவு தாழ்பாழ், இப்படி நிறைய சொல்லலாம். இதெல்லாம் மற்றவர்கள் சொல்லி எனக்கு தெரிய வந்ததே தவிர, எனக்கு ஒரு போதும் இவை சங்கடமாக தெரியவில்லை. எல்லா பொருட்களும் வலதுகை பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், இந்த பழக்கம் ஒரு நல்ல அடையாளம். எங்க வகுப்பில் ஒரே உயரத்தில், கிட்டதட்ட ஒரே நிறத்தில் இரண்டு நடராஜன் இருந்தபோது நான் லெப்ட்நடராஜன் ஆனேன். அதற்கு முன்னால் சிறிய வகுப்பில் என் பேர் நொட்டாங்கை (இந்த நொட்டாங்கையும் பீச்சாங்கையும் எப்படி எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சவங்க கண்டிப்பா சொல்லுங்க!). நான் இடதுகையில் எழுதுவதை ரொம்ப ஆச்சரியமா பார்த்தவங்க, நிறைய பேர். சிலர் நான் இடதுகையில் எழுதுவேன்னு சொன்னதும் அப்படியா? நீ வலமிருந்து இடம் எழுதுவியா?’ ன்னு கேப்பாங்க; அதாவது உருது எழுதற மாதிரி. எழுதிக்காமிச்ச பிறகுதான் அவங்களுக்குச் சந்தேகமே தீரும்.
இடதுகையால் எழுதுவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்ல. ஆனா, சில சூழ்நிலைக் கஷ்டங்கள் மட்டும் இருக்கு. என் வகுப்பில் ஒருவரோ இருவரோ தான் அப்படி இருப்பார்கள். சராசரியா நூறு பேர் இருக்கற வகுப்பில் அதுவே அதிகம். ஒரு பெஞ்சில் ஆறு பேர் உட்கார வேண்டும். நான் இடதுபக்க ஓரத்தில் உட்காரவில்லை என்றால், கண்டிப்பா பக்கத்தில் உள்ளவனின் (வலதுகையால் எழுதுபவர்) முழங்கையும் என் முழங்கையும் இடிக்கும். இரண்டு பேரும் சரியா எழுத முடியாது. அரசியலில் நாற்காலி போல, பள்ளிக்கூடத்தில் பெஞ்சு ஓரத்துக்கு அத்தனை போட்டி இருக்கும். அதை அடைய அதிக சாமர்த்தியம் வேணும். நான் எழுதும் போது ஒவ்வொரு வரியும் எனக்கு செங்குத்தா தான் எழுதுவேன்; அதுக்கு ஏத்தாப்புல காகிதத்தை திருப்பி வச்சுப்பேன்.
ஒரு முறை பரீட்டையில் நான் வலது பக்க ஓரமா உட்கார்ந்திருந்தேன், இடதுபக்கம் இன்னொருத்தன். மேற்பார்வைக்கு வந்தவர், அவர் பெயர் என்னமோ இருந்துட்டு போகுது. நாங்க அவரை செல்லமா சதுக்க பூதம்னு தான் கூப்பிடுவோம் (சதுக்க பூதம், சிலப்பதிகாரத்தில் ஒரு பாட்டில் வருகிறது). அவருக்கு நான் அந்த பையனுக்கு உதவி செய்கிறேனோன்னு ஒரு சந்தேகம். மனுஷன் கேள்வியால் துளைத்துவிட்டார்; பரீட்டையே எழுதவிடவில்லை.
ஒரு தடவை ஏதோ கல்யானமோ காதுகுத்தோ? ஒரு வீட்டுக்கு போயிருந்தோம். அங்க, இடதுகையால பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிச்சேன். அங்க வந்த ஒரு அம்மா 'Don't you have manners?' அப்படின்னு கேட்டாங்க. அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டிருந்தேன்; ‘manners’ அப்படின்னா என்னனு தெரியாது. எதோ அவங்ககிட்ட இல்லாதத கேக்கறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, பந்தி பரிமாறுவது. சில பேர், இடதுகையால சாதம் போட்டா நான் சாப்பிட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. சிலர், என்னோட இடதுகை பழக்கத்த சொன்னவுடன், ‘அப்படின்னா பரவாயில்லை! தாராளமா பரிமாறுன்னு சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒரு விஷயத்தோட முடிச்சுக்கறேன். இடதுகை பழக்கமுடைய நிறைய பிரபலங்கள், சாதனையாளர்கள் இருங்காங்க. அதனால், எல்லா இடதுகை பழக்கம் உள்ளவங்களும் அப்படித்தான் புத்திசாலியா, திறமைசாலியா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை உலகம் பூராவும் பலருக்கு இருக்கு. என்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?

Sunday, December 13, 2009

வெற்றி நிச்சயம்!

நீங்கள் முன்னேற எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள். இந்த அருமையான விடியோவைப் பாருங்கள்.

Thursday, November 5, 2009

வாழ்க்கை என்னும் அற்புதம்


"நான் ஏன் பிறந்தேன்?"
இந்தக் கேள்வியை நீங்கள் எத்தனை முறை உங்ககிட்டயே கேட்டிருப்பீங்க. நான் சண்ட போடும் போதெல்லாம்  அம்மாகிட்ட "என்ன ஏன் பெத்த?”ன்னு கேட்பேன்; ரொம்ப முட்டாள்தனமான கேள்வி. ஒங்க வாழ்க்கை சரியா போறவரைக்கும் இந்த கேள்வியெல்லாம் தோனாது. சிலருக்கு எப்பவுமே தோனாது. வாழ்க்கை நீங்க நெனச்ச மாதிரி போலைனா, அப்ப வர்ற முதல் கேள்வியே இதுதான்.

அந்த கேள்விக்கு பதில் கடைக்கறதுக்குள்ள வேற கேள்வியெல்லாம் தோணும். "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?", "என்ன ஒருத்தரும் மதிக்க மாட்டேங்கறாங்களே ஏன்?", இப்படியே கேட்டுட்டே போய் கடைசியா "இப்படி ஒரு வாழ்க்க வாழறதுக்கு செத்துபோலாமா?" -ன்னு தோனும். இதுக்கெல்லாம் பதில்?

கடவுள் உங்கள, இங்கவுள்ள இடத்த நிரப்பரதுக்காக படைக்கல. இங்கவுள்ள சொத்து சுகத்தையெல்லாம் அனுபவிக்க மட்டும் படைக்கல. அப்பறம் எதுக்கு, இந்த ஊரில, இந்த தெருவுல, நீங்க பிறக்கனும்? உங்கள சுத்தியுள்ள யாரோ ஒருத்தருக்கோ இல்ல பலருக்கோ உதவி செய்யதான் உங்கள படைச்சிருக்கனும். அது உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்; உங்க பக்கத்து வீட்டுகாரரா இருக்கலாம்; உங்க கூடபிறந்தவங்களா இருக்கலாம்; வந்த இல்ல வரப்போற துணையா இருக்கலாம்; உங்க குழந்தையாகூட இருக்கலாம்.
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்னும் விளக்கை பாதுகாத்து;
இன்னும் பிரகாசமாக அடுத்த தலைமுறைக்கு அளிப்பதற்கே நான் உழைக்கிறேன்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
இதையெல்லாம் யோசிக்கத் தூண்டினது ஒரு சிறுகதையும் அதை தழுவி வந்த ஒரு திரைப்படமும். 1943ல பிலிப் வான் டோரன் (Philip Von Doren) எழுதிய The Greatest Gift ங்கற சிறுகதை தான் அது. பின்னர் 1946ல Frank Capra அதை தழுவி It’s A Wonderful Life ன்னு ஒரு படம் இயக்கினார்.

ஜார்ஜுக்கு மேற்படிப்ப முடிச்சிட்டு உலகத்த சுத்தனும் ஆசை. ஆனா, கிளம்பும்போது அவனோட அப்பா இறந்துவிடுகிறார். குடும்ப தொழில ஜார்ஜ் பார்த்துக்கனும்; இல்லாட்டி சொத்தெல்லாம் ஒரு பேராசைக்காரன்ட போயிடும். எப்படியாவது இந்த தொழில இருந்து விடுபடனும் ஜார்ஜ் நினைக்கிறான். ஆனா, முடியல. அதுக்குள்ள அவன் விரும்பின பெண்னையே கல்யாணம் செய்துக்கறான். குடும்பத்தோடு அதே ஊரில வளமா இருக்கான்.

ஒரு நாள் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டதால வாழ்க்கையை வெறுத்து தற்கொலை பண்ணிக்கப்போறான். அப்ப ஒரு தேவதை அவனை தடுத்து என்ன ஏதுன்னு விசாரிக்குது. தன்னோட கஷ்டத்த சொல்லி "நான் ஏன் பிறந்தேன்?"ன்னு தேவதைகிட்ட சண்டை போடறான். தேவதை அவன் பிறக்காமலே இருந்தால் அவனைச் சுற்றியுள்ளவங்க எப்படி கஷ்டப்படறாங்கன்னு காமிக்குது. அப்பதான் ஜார்ஜ் தான் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கோம்ன்னு புரிஞ்சிக்கரான்.

It’s A Wonderful Life ஒரு நல்ல திரைப்படம். மிக எளிமையான, அதேநேரம் நேர்த்தியான திரைக்கதை; படம் முழுதாகவே இழையோடும் நகைச்சுவை இருப்பதோடு மட்டுமில்லாமல், வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்று புரியவைக்கிறது. முடிந்தால் நீங்களும் இந்தப் படத்தைப்பாருங்கள்.

நம்முடைய வாழ்க்கையும் அற்புதமானதுதான்.

Monday, February 2, 2009

கேண்டீட்



தலைப்பு : கேண்டீட்

எழுத்தாளர் : வோல்ட்டேர்

தமிழில் : பத்ரி சேஷாத்ரி

பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம், சென்னை.

விலை : ரூ. 100/-

மேலும் விபரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.


"இந்த உலகம் ஏன், எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது?"

"நம் அனைவரையும் கொள்ளைச் சாவுக்குக் கொண்டுசெல்ல."

இப்புத்தகம் ஒரு நாவலாக மட்டும் இல்லை, வாழ்வியல் தத்துவங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு நூல். வோல்ட்டேர், ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அரசர்கள், பாதிரியார்கள், ஜமீந்தார்கள், மக்கள் என அனைவரின் குரூரபுத்தியையும் போட்டுடைக்கிறார். கேண்டீட் என்ற இளைஞனின் தேடலின் கூடவே மனிதர்களின் மடத்தனத்தையும் பேராசையையும் அதன் விளைவுகளையும் கூறும் வோல்ட்டேர், இறுதியில் வாழ்வைத்தாங்கும் தத்துவத்தையும் கூறுகிறார்.

துரத்தப்படுகிறான் கேண்டீட். போகும் இடமெல்லாம் விதி அவனைச் சக்கையாய் பிழிந்தெடுக்கிறது. தன் காதலி, குரு போன்றவர்களை மாறி மாறிப் பிரிகிறான். காதலிக்காகவே பயணப்படுகிறான். செல்லும் இடமெல்லாம் போர், மதப்பேய்கள், பேராசை கொண்ட மக்கள் என்று பலரையும் அவன் எதிர்கொள்ளும் போது நமக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உலகத்தை புரியவைக்கிறார் வோல்ட்டேர். வாழ்க்கையில் நண்பர்களின் தேவையை ககாம்போவும் மார்டினும் உணரச்செய்கிறார்கள். அறிவுரைகளைத் தருவதற்கு பாங்க்லாஸ்சும் கிழவியும் இருக்கிறார்கள்.

போர்களைப்பற்றிப் படித்திருக்கிறோம். மன்னர்களின் ஆளுமை, அவர்களின் படைபலம், தளபதிகளின் தோள்பலம், வீரர்களின் வாள்பலம், மந்திரிகளின் குள்ளநரித்தனம், வாரிசுகளின் கையாலாகாத்தனம், என்று பலவற்றை படித்திருக்கின்றேன். ஆனால் போர்களின் போது அந்நாட்டுப் பெண்களின் நிலைபற்றி படித்ததில்லை. இந்நாவலில் வோல்ட்டேர் பெண்களின் நிலையை விரிவாகக் கூறுகிறார். பேரழகி குனிகொண்டெயும் கிழவியும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறும்போது, ஆண்களின் மோகவெறி எத்தனைக் கொடுமையென்பது புரிகிறது. பணக்காரர்களும் மதத்தின் பெயரால் மக்களை ஆள்பவரும் பேரழகி குனிகொண்டெயை அடையத்துடிக்கிறார்கள். வோல்ட்டேர், இவர்களின் முகத்திரைக் கிழித்தெரிகிறார்.

எல் டொராடோ என்று ஒரு நாட்டுக்கு கேண்டீடும் ககாம்போவும் செல்கிறார்கள். ஆங்கிலத்தில் Utopia என்று கூறுவார்கள். Utopia என்பது ஒரு கற்பனை நகரம். Utopia - வில் அனைத்துமே மிகச் சரியாக இருக்கும். அதேபோல் எல் டொராடோவிலும் எல்லாம் மிகச் சரியாக உள்ளது. எல் டொராடோவின் அமைப்பையும் அழகையும் விவரிக்கும் போதே நமது கற்பனை விரிகிறது. தெருவில் கிடக்கும் வைரங்கள், இலவச ராஜபோக விருந்து, பிரிவினை இல்லாமை இப்படி ஒரு நாடா? ஆச்சரியம்தான். "எங்கள் மஞ்சள் களிமண் உங்கள் ஐரோப்பியர்களுக்கு என்ன சந்தோஷத்தை தருகிறது என்று எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை" என்று எல் டொராடோவின் மன்னர் கூறுகிறார். அவர் கூறும் மஞ்சள்மண் வேறொன்றுமில்லை தங்கம் தான். இப்படி ஆங்காங்கே சந்தோஷதையும் துக்கத்தையும் மாறி மாறி கேண்டீட் அனுபவிக்கிறான்.

இந்நாவலில் பல விஷயங்கள் மனதைப் பதற வைக்கின்றன. கேண்டீட் பல்கேரியர்களிடம் அனுபவிக்கும் கொடுமை, குனிகொண்டே, கிழவி அனுபவிக்கும் கொடுமை, பாங்க்லாஸ் அனுபவிக்கும் கொடுமை போன்று பல விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் பதறவைத்தது இதுதான். தங்கள் கரும்பு ஆலைகளில் வேலைபார்க்கும் கறுப்பர்களுக்கு ஆங்கிலேயர்கள் கொடுக்கும் தண்டணை. அந்தக் கறுப்பன் "ஐரோப்பாவில் நீங்கள் சர்க்கரையைச் சாப்பிடுவதற்கான விலை இதுதான்" என்பான். என்ன கொடுமை இது?

இந்நாவலில் இரண்டு தத்துவவாதிகள் வருகிறார்கள். ஒருவர் பாங்க்லாஸ், மற்றோருவர் மார்டின். பாங்க்லாஸ் 'எதுவும் இப்போது இருப்பதைவிடச் சிறப்பானதாக இருக்க முடியாது' என்பார். ஆனால், மார்டினோ இதற்கு நேர்மாறான கொள்கயைக் கொண்டவர். என்னால் பாங்க்லாஸை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பாங்க்லாஸோ தான் துன்பப்படும் போதுகூட தன்னுடைய கொள்கையை விடவில்லை. முதலில் பாங்க்லாஸின் தத்துவத்தை ஏற்கும் கேண்டீட், ஒரு கட்டத்தில் அவரது கொள்கையை துறக்கிறான். காதலியும் செல்வமும் தன்னைவிட்டுப் போன சமயத்தில் கேண்டீட் மார்ட்டினைச் சந்திக்கிறான்.

மனத் தடுமாற்றத்துடன் இருக்கும் கேண்டீடுக்கு ஆதரவாகவும் உற்ற நண்பனாகவும் மார்டின் அமைகின்றான். குனிகொண்டேயைக் காண அவர்கள் பயணிக்கும் போது ஒரு தத்துவ விவாதமே நடத்துகிறார்கள். மார்டின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. வோல்ட்டேர் தன்னுடைய கருத்துக்களை மார்டின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மார்டின் கேண்டீடிடம் பிரான்ஸைப் பற்றிக் கூறும்போது, 'பிரான்ஸில் ஒரே குழப்பம். அது அனைத்து குப்பைகளும் நிறைந்த இடம்' என்கிறான். இவ்வளவு கடுமையான விமர்சனத்தை தன் நாட்டின்மீது வைக்கிறார் வோல்ட்டேர். (அவரை எப்படி விட்டுவைத்தார்களென்று தெரியவில்லை. நம் நாட்டில் இப்போது இப்படியெல்லாம் சொன்னால் புடைத்துவிடுவார்கள்).

பிரான்ஸில் நடக்கும் நாடகங்களையும் மக்களையும் அவர் சாடியிருக்கிறார். பிரான்ஸில் கேண்டீட் சந்திக்கும் மனிதர்களை பணத்துக்காக அலைபவர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் சித்தரித்துள்ளார். பிரான்ஸில் கேண்டீட் ஏமாற்றப்படுவதாகவே வோல்ட்டேர் சித்தரித்துள்ளார். அப்போதெல்லாம் அவனுக்கு மார்டினின் அறிவுரையே உதவுகின்றன. பிரான்ஸிலிருந்து அவர்கள் இங்கிலாந்துக்குச் செல்கிறார்கள். வோல்ட்டேர் ஆங்கிலேயர்களையும் முட்டாகள் என்கிறார்.

பொகோகுராண்டே பிரபு. கேண்டீட் உலகில் சந்தோஷமாக இருப்பவர்களைக் காண என்னுகிறான். அப்படியொருவர் தான் பொகோகுராண்டே பிரபு. வெனீஸ் நகரின் பணக்காரர். அவரிடம் எல்லமே இருக்கின்றன. ஆனால் அவருக்கு எதிலும் திருப்தியில்லை, எதுவும் சந்தோஷம் அளிக்கவில்லை. அவரிடமுள்ள ஓவியங்களை விமர்சித்தார். பிரபுவிடம் மிகச் சிறந்த நூல்கள் இருந்தன. அவை எதுவுமே தன்னை மகிழ்விக்கவில்லை என்றார் அவர். அனைத்தையும் விமர்சிப்பதில் தான் அவருக்கு மகிழ்ச்சியே. இக்கதாபாத்திரமும் வோல்ட்டேரின் கருத்துக்களையே கூறுவதுபோல் தோன்றுகிறது.

இறுதியில் கேண்டீட், தன் காதலி, ககாம்போ, கிழவி, பாங்க்ஸால், மார்டின் அனைவருடனும் கான்ஸ்டாண்டிநோபிளில் குடியேறுகிறான். ஆயினும் அவர்களது தத்துவ விவாதங்கள் முடியவில்லை. உலகில் நடக்கும் விஷயங்கள் அவர்களைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இறுதியில் ஒரு வயதானவரின் மூலமாக அவர்கள் சந்தோஷத்தின் மூலத்தை காண்கிறார்கள்.

இப்புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்த பத்ரிக்கு பாரட்டுக்கள். ஒர் சிறந்த இலக்கியத்தை மிகவும் அவசியமான நேரத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இப்புத்தகத்தின் அட்டைகளையும் அறிமுகத்தையும் எடுத்துவிட்டு, ஒருவரிடம் படிக்கக் கொடுத்தால், இது மொழிபெயர்க்கப்பட்டது என்று அவர் நம்புவது கடினம். எளிதான சொற்கள், நறுக்கென்று வசனங்கள் போன்றவை வாசிப்பதற்கு நெருடலை ஏற்படுத்தாமல் உள்ளது. சுவாரசியமான விஷயங்களைக் (மூலத்திலிருந்து) குறைக்காமலும் மற்ற இடங்களில் சுருக்கியும் அளித்திருப்பது படிப்பதற்கு விறுவிறுப்பாக உள்ளது.

போர்களின் வக்கிரத்தையும் எல் டொராடாவின் அழகையும் விவரித்திருப்பது அருமை. கதாபாத்திரங்களின் உரையாடல்கள் அனைத்துமே சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. சில தத்துவ வசனங்களை மிக நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார், பத்ரி. மார்டின் பேசுவதாகக் கூறப்பட்டுள்ள வசனங்கள் அனைத்துமே என்னைக் கவர்ந்தன. (விமர்சனத்தின் தொடக்கத்தில் தரப்பட்டுள்ளது கேண்டீடுக்கும் மார்டினுக்கும் நடக்கும் விவாதமே.) ஐரோப்பவிலுள்ள மத சம்பந்தமான பெயர்களுக்கான விளக்கங்களை அடிக்குறிப்பில் தந்திருக்கிறார்கள். சில ஐரோப்பிய பெயர்களை தமிழில் வாசிப்பதற்கு கடினமாக உள்ளது. அவற்றை ஆங்கிலத்திலும் தந்திருக்கலாமோ என்று எனக்கு தேன்றுகிறது. அளவுகளைக் குறிக்கும் சொற்களான பவுண்ட், லீக் போன்றவைக்குப் பதிலாக நாம் வழக்கத்தில் குறிக்கும் கிலோ, மீட்டர் போன்ற சொற்களைக் பயன்படுத்தியிருக்கலாம்.

கதையில் வரும் பாத்திரங்கள் அனைவருமே துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். யார் அதிகம்? யார் குறைவு? என்று ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. ஒரு நூலின் சிறப்பம்சமே அது எத்தனை பேரை பாதிக்கிறது என்பதில் தான் உள்ளது. 250 ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட இப்புத்தகம், எத்தனை பேரை பாதித்துள்ளது என்று தெரியவில்லை. ஆனால், அதே நோக்கம் சிறிதும் மாறாமல் பத்ரி மொழிமாற்றம் செய்துள்ளார்.

மனிதன் என்ற மிருகம், நாளுக்கு நாள் தன் ஆசைகளை வளர்த்துக் கொண்டு செல்கிறான். உலகிலுள்ள சிறந்தவை அனைத்தும் தனக்கே சொந்தமாக வேண்டும் என்று கனா வளர்க்கிறான். அவற்றை அடைவதற்காக சில கோமாளித்தனங்களையும் பல முட்டாள்தனங்களையும் செய்யத் துணிகிறான். சிலவற்றைச் செய்தும்விடுகிறான். அவற்றின் விளைவுகளைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு விஞ்ஞானமோ மருத்துவமோ தேவையில்லை. சக உயிர்களிடத்தில் அன்பும் கருணையுமே போதும்.

விவாதங்கள் எத்தகயை பயன்களை தரும்? ஒன்றுமேயில்லை என்கிறார், வோல்ட்டேர். சற்று சிந்தித்தால் அவரது கருத்திலுள்ள உண்மை புரியும். நம் நாட்டில் சர்ச்சைகள் ஏற்ப்படும் போதெல்லாம், தொலைக்காட்சிகளில் பல நூறு மணிநேரங்கள் விவாதங்கள் நடத்த்ப்படுகின்றன. காரசாரமான விவாதங்களை ஆர்வமுடன் நாமும் பார்க்கிறோம். ஆனால், பல விவாதங்கள் தீர்வுகளை நேக்கிச் செல்வதைவிட புதிய சர்ச்சைகளையே உருவாக்குகின்றன. அதனால் தான் வோல்ட்டேர் 'நாம் அனைவரும் விவாதம் செய்யாது, வேலை செய்வோம். அது ஒன்றுதான் வாழ்க்கையைத் தாங்கும்படி வாழ வழிவகுக்கும்' என்கிறார்.

ஆனால், உலகத்தைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் இவ்வளவு கவலைப்படும் வோல்ட்டேர், ஏன் அந்தக் கிழவரை இப்படி கூறவைத்தார் என்று தான் புரியவில்லை.

பொது நிர்வாகத்தில் தலையிடும் எவருமே ஒரு கட்டத்தில் மோசமான முறையில் சாவைச்சந்திப்பார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுகு அது நன்றாக வேண்டும்! ஆனால்கான்ஸ்டாண்டிநோபிளில் நடப்பவற்றைப் பற்றியெல்லாம் நான் என் தலையைக்குழப்பிக்கொள்வதில்லை. என் தோட்டத்தில் விளையும் பழங்களை அங்கே விற்பனைக்குஅனுப்புவதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன் ”.