Friday, November 14, 2008

புதியமுகம்??

நம் ஊரில், அலுவலகங்களில் யாரவது புது அதிகாரி வந்தால் காரியம் சாதிக்க வேண்டி அனைவரும் எலுமிச்சைப்பழத்தோடு வாழ்த்த வரிந்துவிடுவார்கள். ஆனால் உலகமே ஒருவரை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது. அறிக்கைகள், கட்டுரைகள், கவிதைகள், சித்திரங்கள், என அனைத்திலும் அவரே நிறைந்திருக்கிறார். தங்கள் ஊர் மாமன்ற உறுப்பினர் (Councilor) யாரென்ரே தெரியாதவர்கள் கூட இவரைத் தெரிந்து வைத்துத்ள்ளார்கள். அவரும் உலத்தலைவனைப் போல் அனைத்து விசயங்களைப்பற்றியும் பேசி வருகிறார்.

அவர், பாரக் ஒபாமா.

அமெரிக்காவின் அடுத்த அதிபர். முதல் கருப்பின அதிபர். அவர் சாதித்தது இதுதான். அவர் அதிபராக வரவேண்டும் என்று எத்தனை அமெரிக்கர்கள் ஆசைப்பட்டார்களென்று தெரியவில்லை. இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியர்களிடயே நடத்திய அனைத்துக் கருத்துக்கணிப்பிலும் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகம். ஏன்? அவருக்கு எப்படி இத்தனை ஆதரவு? அவர் நமக்கென்ன செய்தார்? எதிர் வேட்பாளர் ஜான் மெக்கெயின் மீது என்ன பகை? ஒன்றுமில்லை. இவர்கள் இருவரையும் சில மாதங்களுக்கு முன் நமக்கு தெரியவே தெரியாது. ஆனாலும், ஒபாமா அதிபராவதில் நமக்கு அவ்வளவு அக்கறை. சென்னையில் ஒரு பள்ளியில் மாதிரி அமெரிக்க தேர்தல் நடத்தியுள்ளார்கள். இப்படியொரு மாதிரி தேர்தலை இந்தியப் பிரதமரைத் தேர்தெடுக்க கண்டிப்பாக நடத்தமாட்டார்கள்.

சனவரியில் அதிபராகிரார் ஒபாமா. அவர் விளையாடுவதற்கு காஷ்மிர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் போன்று நிறைய இருக்கின்றன. இப்போது, அவர் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு நாய்க்குட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலநாட்டு அதிபர்களும், பிரதமர்களும், முதல்வர்களும் வாழ்த்துக்களை அனுப்பி தங்கள் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அவரின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.என்ன செய்யப் போகிறார் ஒபாமா? அவரின் முன்னுரிமை ராணுவத்திற்கா? வறுமை ஒழிப்பிற்கா? அவர் இந்தியாவுக்கு நண்பனா? எதிரியா? பயங்கரவாதம் தூண்டப்படுமா? தடுக்கப்படுமா? விடைகாணப் பொறுமையில்லாமல் விவாதங்கள் தொடங்கிவிட்டன.

"We Can Change" என்ற கோஷத்துடன் பதவிக்கு வந்திருக்கின்றார் ஒபாமா. மாறாத ஒன்று அமெரிக்காவின் ஆதிக்க அரசியல். எத்தனை முகங்கள் மாறிமாறி வந்தாலும் அது மாறப்போவதில்லை. என்ன செய்யப் போகின்றது ஆதிக்கத்தின் புதியமுகம்?