Monday, October 8, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #5

என்னைச் சுற்றி எப்படி திடீரென்று இத்தனை மனிதர்கள்? திடீரென்று இல்லை காலங்காலமாக, கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் பெருகி வந்திருக்கிறார்கள். இன்னும் பெருகி வரப்போகிறார்கள். என்னை ஒரு மூலையில் போட்டு அடைக்க வேண்டியிருக்கிறது. தூங்குவதற்கும் விழிப்பதற்கும் நாற்காலியை நகர்த்துவதற்கும் அலாரம் வைப்பதற்கும் எல்லாருடைய சவுகரியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நானென்பது இரண்டாம்பட்சமாகி, நானெனும் பொய்யை முன்னால் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மெய்யுலகில் போதாதென்று, மெய்நிகர் உலகில் மொய்க்கும் கூட்டம். பொறாமையும் இயலாமையும் கூடவே மறந்தேபோய்விட்ட பழைய கனவுகளும் அதன் தோல்விகளும்; கருணை, காருண்யம் இத்யாதிகளுக்கெல்லாம் எங்கே இடம்? கடித்துக் குதறுவதே நியாயமகாப்படுகிறது. உள்ளிருக்கும் மிருகம் வெளிப்பட்டு நிற்கையில், உலகமே அழுகிறது.

லட்சியவாதிகள் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். குறைந்தபட்ச லட்சியம் கூட இல்லாத மிருகம், இப்படி ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.

Thursday, June 14, 2012

அறிவுரை, ஆராயக்கூடாதது



மேலிருக்கும், ஹென்றி மில்லரின் அறிவுரையை நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். 

நண்பர் : சூப்பர் சார். பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெச்சுக்கணும். ரொம்ப நன்றி. 

நண்பர்: ஆனா அஞ்சாவது பாயிண்டும் எட்டாவது பாயிண்டும் ஒரே சமயத்தில் ஒர்க் அவுட் ஆகுமா?

நான்: தெரியலியே சார்! இல்லாட்டி சும்மா எழுதிட்டு.. அப்புறம் மானே தேனே சேர்த்துக்கலாம்னு சொல்றார் போல
நண்பர்: அஞ்சாவது பாயிண்ட் : படைப்பூக்கம் இல்லாதபோது அதை ஒரு வேலையாச் செய்.

எட்டாவது பாயிண்ட்: வண்டி மாடு கணக்கா வேலை செய்யாதே. உன் சந்தோஷத்துக்கு மட்டுமே வேலை செய்.

இது எப்படி?

நான்: ஒருவேளை எந்த காரணத்தைக் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதேன்னு சொல்றதுக்காக அஞ்சாவத சொல்றாரோ?

நண்பர்: அப்படியாதான் இருக்கும். இல்லாட்டி லாஜிக் இடிக்குமே?

நான்: இப்போ ஒன்பது இடிக்குமோ? ஒன்பது: முடியலையா விட்டுடு. ஆனா அடுத்த நாள் கண்டிப்பா தொடர்ந்து செய்

நண்பர்: என்ன இது, இவரோட அட்வைசுக்கே கோனார் நோட்ஸ் எழுதணும் போலயே!

நண்பர்: அத்தோட நாலாவது பாயிண்ட்டை சேத்துப் படிங்க :)

நான் : சார்! தனித்தனியா படிச்சிட்டு ஃபாலோ பண்ணுவோம்! இப்படி யோசிச்சா முதலுக்கே மோசம்

Monday, May 21, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #4

வீட்டில் சில மாதங்களுக்கு முன் ஃபிரிட்ஜ் சாவியை தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கிடைக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்து வாஷிங்மெஷின் வாங்கியதற்கான பில்லைத் தேடும் போது ஃபிரிட்ஜ் சாவி கிடைத்துவிட்டது. வாஷிங்மெஷின் பில் இன்னும் கிடைக்கவில்லை. வேறு ஏதாவது தேடும் போது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். எதையாவது தொலைக்க வேண்டும். பொருட்களை பத்திரமாக வைக்கும் போதே, அவற்றை தொலைத்துவிடுகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரு புத்தகத்தில் படித்த விஷயத்தை நினைவில் விஷுவலாக வைத்துக் கொண்டு, பின் தேடும் போது ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லையென்றாலும் ‘இந்தக் கதையில், ஏதோவொரு வலதுபக்க பக்கத்தில் மேலிருந்து இரண்டாவது பத்தியில் பார்த்தேன்’ என்று தேடிப்பிடித்துவிட முடிகிறது. இணையத்திலோ மின் புத்தகங்களிலோ, மிகச் சரியான கீவோர்ட் இல்லையென்றால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிரஷ்டமிருந்தால், இணையத்தில் முன்பு பயணித்த வழியிலேயே வந்தால் கண்ணில் படக்கூடும். இது கிட்டத்தட்ட கர்சீஃபை எங்கோ போட்டுவிட்டு, நாம் போன இடத்திற்கெல்லாம் போய் எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடுவதைப் போன்றது தான். இப்போது தான் புக்மார்க், ஃபேவரைட், விஷ்லிஸ்ட் போன்றவற்றின் அருமை புரிந்திருக்கிறது.

விவாதங்களில் பங்கேற்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நாம் சொல்லாத கருத்தை டிஃபண்ட் செய்ய வைத்துவிடுவதோடு, பொருத்தமில்லாத, நீங்கள் விரும்பாத, மட்டமான ஒரு பட்டத்தையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். 'உனக்கு எல்லா விஷயமும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருக்காதே’ என்று மூளைக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கொஞ்சம் கடினம் தான். ஆனால், செய்யவில்லையென்றால் தர்ம அடி நிச்சயம். "உன்னை யாராவது முட்டாள் என்று சொன்னால், ‘எனக்கே அந்தச் சந்தேகம் உண்டு’ என்று சொல்லிவிடு” என்று கண்ணதாசன் சொன்னதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் ஒரு நாள் என் சகா தன்னுடைய கணிணியில் ஏதோ காண்பிப்பதற்காக கூப்பிட்டார். எழுந்து போய், அவருடைய தோளைத் தொட்டேன். ‘பட்’ என்று சத்தம். எனக்கு விரலில் சுள்ளென்ற வலி. அவருக்கு தோளில் வலி. அவர் கணிணியைத் தொட்டுக் கொண்டிருந்ததால், அதிலிருந்து தான் ஷாக் அடித்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். பின் சோதனை செய்ததில் அப்படித் தெரியவில்லை. அதற்கு சில நாட்கள் கழித்து நான் இன்னொரு நண்பரைத் யதேச்சையாகத் தொட, மீண்டும் ‘பட்’. இந்த முறை அவருக்கு வலிக்கவில்லையாம். எனக்கு வலித்தது. பிறகு ஒரு நாள், ஒரு லாப்டாப்பைத் திறக்கும் போது, அதிலிருந்த உலோக ஃபீடிங்கில் என் கை பட்டு, மீண்டும் ‘பட்’. பின் அலுவலக அறையின் கதவில் இருக்கும் இரும்புக் கைப்பிடியைத் தொடும் போது ‘பட்’. அலுவலகத்திற்கு என்னைச் சந்திக்க வந்த ஒருவர்‘ஹலோ! நடராஜன், ஹவ் ஆர் யூ’ என்று கைகொடுத்தார். நான் ஷாக் கொடுத்தேன். எப்படியோ ஸ்டாடிக் மின்சாரம் பாய்கிறது ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. 

இதை ஒரு நண்பரிடம் சொல்ல, அவர் நாற்காலியில் இருக்கும், கிழிக்கப்படாத ப்ளாஸ்டிக் உறையினால் தான் இப்படி நடக்கிறது என்றார். பள்ளி வகுப்புகளில், சீப்பையும் காதிதத் துண்டுகளையும் வைத்துச் செய்த பயிற்சியைக் கொண்டு இதை விளக்கவும் செய்தார். உடனடியாக எல்லா பிளாஸ்டிக் உறைகளையும் கிழித்துப் போட்டுவிட்டோம். ஒரு மாதம், ஒரு பிரச்சனையும் இல்லை. போன வாரத்திலிருந்து மீண்டும் ஷாக் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது யாரையும் தொடுவதில்லை. கதவின் கைப்பிடியை ஒரு விரலால் கவனமாக இரண்டொரு முறை தொட்டுப் பார்த்துவிட்டுத்தான் கைவைக்கிறேன்.இது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இல்லை, இதைவைத்து ஏதாவது ஒன்றிரண்டு சித்து வேலைகள் தேற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் வாக்குவாதம் செய்யும் போதெல்லாம், கடைசியில், ‘கொஞ்சமாவது சொன்ன பேச்சக் கேளேண்டா. பொண்ணாப் பொறந்திந்திருந்தேன்னா இந்நேரத்துக்கு கல்யாணத்தையாவது பண்ணிக் கொடுத்திருப்பேன், இப்படிப் உயிர வாங்கறையேடா!’ என்றே பல சமயம் முடிக்கிறார். இதையே, சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பனோடு எம்ப்ளாய்மெண்ட் நியூஸை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இப்படிப் பொரட்டறதுக்கு, பொண்ணாப் பொறந்திருந்தா இந்நேரத்துக்கு செட்டில் ஆகியிருக்கலாமேடா’ன்னு சொல்லியிருக்கேன். மேலே சொன்னது உங்களுக்கு ‘ஆணாதிக்கத்தனமாகத்’ தெரியலாம். தப்பில்லை. ஆனால் அந்நாளைய நிலைமை அப்படித்தான் இருந்தது.

Thursday, March 15, 2012

லூசுத்தனமாக வாழ்க்கை #3

எங்கள் வீட்டில் நாற்காலியை நகர்த்தினால் (இழுத்தால்) கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கம் கெடுகிறது. சீனத் தொழில்நுட்பத்தாலும், அவர்களின் பொருள் பரப்பும் மேன்மையாலும் பெங்களூரு வரை வந்துவிட்ட அதிபயங்கர சத்தம் எழுப்பும் தொலைப்பேசியை காலை 4 மணிக்கே பயன்படுத்தும் கடைத் தெரு பூக்காரரால் குறைந்தது நாலைந்து வீட்டிலிருப்பவர்களுக்காவது தூக்கம் கெடும் என்று நம்புகிறேன். அதிகாலை 2 மணிக்கு கத்தத் துவங்கி, என்ன செய்தும் நான்கு மணிவரை அடங்காத சுவர்க்கோழி என் தூக்கத்தை கெடுத்தது. தன் வாயால் கெட்டது. செத்தது. ஆக இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு உயிரினத்தின் தூக்கத்தைக் கெடுக்கவே படைக்கப்பட்டிருக்கிறது. நாம் யாருடைய தூக்கத்தையெல்லாம் கெடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்து முடித்துவிட்டால் பரமபதம் நிச்சயம்.

இங்கே ஒரு மனிதர் இருக்கிறார். கொஞ்சம் வயதானவர். காலை ஏழு மணிக்கெல்லாம் கீழிருக்கும் ஏதாவது ஒரு கடையில் அவரைப் பார்க்கலாம். பெரும்பாலும் புகைத்துக் கொண்டு இருப்பார். மருந்துக் கடையில் கொஞ்ச நேரம். தையல் கடையில் கொஞ்ச நேரம். பின் எதிர் வரிசையில் இருக்கும் பல்பொருள் கடை. பிறகு அதற்கு அடுத்துள்ள சலூன் பெஞ்ச். இரவு கடையடைக்கும் வரை இப்படி சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கிறார். கடைக்காரர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னாலும் போவதில்லையாம். அவருக்கு வீடெல்லாம் இருக்கலாம். அங்கு போக பிடிக்காமல் இருக்கலாம். அல்லது இந்தக் கடைத்தெரு பிடித்திருக்கலாம். அல்லது மனிதர்களை தள்ளி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடித்திருக்கலாம். அவருடைய அனுபவம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்பட்டு பொழுதைக் கடத்துவது மாதி்ரியிருக்கிறது. அந்த மனுஷருக்கு என்ன பிரச்சனையோ?

காலையிலேயே எரிச்சலோடு இருந்தால், அன்று நீங்கள் சந்திக்கும் அனைவரையும் எரிச்சல்படுத்திவிட முடியும். எரிச்சலடைவதற்கு முக்கியக் காரணம், ஒழுங்காக சோறு திங்காதது. அல்லது சரியாகத் தூங்காதது. அல்லது உடம்பில் எங்காவது ஒரு வலி. சின்ன வலியாக இருந்தால் கூடப் போதும். குறிப்பாக கழுத்து வலி முழங்கால் வலி. இதெல்லாம் என்னுடைய வெட்டியாராய்சசின் முடிவுகள். அதனால் எல்லாவற்றுக்கும் எரிச்சல் வந்தால், யார் காரணம் என்று யோசிக்காதீர்கள், நேரே போய் ஒரு மசால் தோசை சாப்பிட்டுவிடுங்கள். அடுத்தது முகத்தை தூக்கி வைத்துக் கொள்பவர்கள் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
Come to the edge.
We might fall.
Come to the edge.
It's too high!
Come to the edge!
And they came
And he pushed
And they flew.
- Chirstopher Logue

தைரியம் வந்த சிலர் குதித்துவிடுகிறார்கள; சிலருக்கு இறக்கை முளைத்துவிடுகிறது, பறந்துவிடுகிறார்கள். சிலர், இறக்கை முளைக்கும் முன்பாகவே தரை தொட்டுவிடுகிறார்கள். தைரியம் இல்லாத சிலர், தாமும் ஒரு நாள் குதிப்போம் என்ற நம்பிக்கையில், குதிப்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது ‘லூசுத்தனமான வாழ்க்கை’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, February 14, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #2

பிப்ரவரி 14 2012                                                                                                    கர மாசி 2

பெங்களூரில் நாளுக்கு நாள் வெய்யில் அதிகமாகிக் கொண்டே போகிறது. நேற்று திருநெல்வேலிலும் பெங்களூரிலும் அதிகளவு வெப்பம் என்பது ஒரே அளவில் பதிவாகியிருக்கிறது. ஆபீஸ் காண்டீனில் சாப்பிட்டுவிட்டு, போட வேண்டிய இடத்தில் போடாமல், எச்சுத்தட்டை தூக்கிக் கொண்டு படியிறங்கும் வரை எனக்கு முத்தியிருக்கிறது.

இந்த வருடம் தொடங்கி ஒன்றரை மாதம் ஆகிவிட்ட பின்னும் உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை. தாயார் சன்னதி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு வருடங்கள் அந்த நாசமாய்போன ஊரில் சுற்றியிருக்கிறேன். எனக்குத் திருநநேலின்னா அது சுலோச்சன முதலியார் பாலத்துக்கு இந்தப் பக்கம் தான். அப்பப்போ ஆரெம்கேவிக்காக அந்தப் பக்கம் போவதுண்டு. இப்போ ஆரேம்கேவியும் பாலத்துக்கு இந்தப் பக்கம் வந்தாச்சு. இந்த புக்க இன்னும் ரெண்டு மூணுவாட்டி படிச்சா நானும் பிரத்யேக திருநேலி வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிச்சிடுவேன். அப்புறம் என்னத் திட்டக்கூடாது. அண்ணாச்சி சுகா இருக்கார். அவரை திட்டவும்.

பிப்ரவரி 14, என்றாலே என் நினைவுக்கு வருவது எங்கள் கணிதப் பேராசிரியர் சுந்தரராஜன் சார் தான். கல்லூரியின் ஒரு கட்டிடத்தில் அவர் பாடம் எடுக்கிறார் என்றால், மற்ற எந்த கட்டிடத்திலிருந்தும் துல்லியமாக கேட்கலாம். அடிவயிற்றிலிருந்து அவர் கத்திக் கத்திப் பாடம் எடுக்கும் போது, அது மத்தியானமே ஆனால் கூட தூக்கம் வராது. பாடத்தை எடுத்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறையும், ஒவ்வொரு தலைப்புக்கு அவர் தரும் நோட்ஸும் மறக்கவே முடியாதது. அவருக்காக ஒரு orkut communityபிரசன்னா உருவாக்கினான்.

ஒரு பிப்ரவரி 14ஆம் நாள் பாடம் எடுக்க வந்தவர், கரும்பலகையில் எழுத கையை உயர்த்தினார், பின் ஏதோ நியாபகம் வந்தவராக திரும்பி எங்களைப் பார்த்துச் சொன்னார்,

"காண்டாமிருகத்த மனசுக்குள்ள நுழைய விடவேகூடாது. நொழைஞ்சிடுச்சுன்னா.. அவ்ளோதான்”