Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, July 18, 2011

சதி!

வழக்கம் போல் இந்த ஞாயிற்றுக்கிழமையும் காய்கறி வாங்க அதே கடைக்குத்தான் போனோம்.  உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் என்று அதே சைக்கிள் தான். இதைப் போன்ற கடைகளில் எந்தக் காய்கறியானாலும் பொறுக்கி பொறுக்கி வாங்கலாம். யாரும் தராசைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டார்கள். பரங்கிக்காயை கூட சிலர் பொறுக்கி பொறுக்கித் தான் வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.   ஒவ்வொரு கத்திரிக்காயாக, ஓட்டையில்லமல், நசுங்காமல், சூத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கத்திரிக்காயை ஏதாவது ரூபத்தில் சமைத்துவிடுவது வழக்கம். இந்த வாரம் சீக்கிரம் வேலையாக வேண்டும் என்பதால் கத்திரிக்காய் வதக்கல் செய்துவிடலாம் என்று ஒருமனதாக தீர்மானமாயிற்று. சரி கொண்டாருங்கள் நான் நறுக்கித் தருகிறேன் என்று களத்தில் இறங்கினேன். அதற்கு இரண்டு வாரம் முன்பு செய்த கத்திரிக்காய் வதக்கல் சொதப்பியதற்கு நறுக்கியவர் தான் காரணம் என்று   தீர்ப்பாகியிருந்தது ஞாபகம் வந்தது. இருந்தாலும் என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக கருதி இந்த வேலையை செய்யத் துணிந்தேன்.

ரொம்பவே கவனமாக என்னால் முடிந்த அளவிற்கு மெல்லிசாக நறுக்கி அதை சமைக்கவும் செய்தாயிற்று. சமைத்தது நானில்லை, வேறொருவர்.

கொஞ்ச நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தோம். கத்திரிக்காயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் அதை தொண்டைக்கு கீழ் இறக்க முடியவில்லை. மீன் வாடை. கத்திரிக்காயை நீள நீளமாக நறுக்கி கறி செய்தால் அது மீனைப் போல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதில் மீன் வாடையெல்லாம் இதற்கு முன் வந்ததே இல்லை. உடன் சாப்பிட்ட இரண்டு பேருக்கும் அதிர்ச்சி. 'டேய்! என்னடா இது?' அது கத்திரிக்காய் தானா என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிட்டது. அந்தக் கத்திரிக்காய்களுக்கு விதித்தது அவ்வளவுதான் போலும் என்று அதை தூரப்போட்டுவிட்டு மாவடுவை சேர்த்துக்கொண்டோம்.

சரி இந்த வாடை எப்படித்தான் வந்திருக்கும்? ஒருவேளை அந்தக் கடையில் மீன் வண்டியில் கத்திரிக்கயையோ அல்லது கத்திரிக்காய் வண்டியில் மீனையோ ஏற்றிவந்திருக்கலாமோ? ஒவ்வொரு நொள்ளையாய் பார்த்து பார்த்து பொறுக்கும் போது வராத வாடை, 3mm  துண்டுகளாக நறுக்கும் போது வராத வாடை, சமைக்கும் போது வராத வாடை கடைசியில் எப்படி வந்தது. மீனும்-கத்திரியும் சேர்ந்து பயனித்திருக்கலாம் என்ற இந்த லாஜிக் எல்லா இடத்திலும் இடிப்பதால் இதை விட்டுவிடலாம்.

எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் எதோ ஒரு வீட்டில் ஞாயிறு தோறும் மீன் சமைப்பார்கள். நான் பார்த்ததில்லை ஆனால் வாடை வரும். நேற்றும் சமைத்தார்கள்.  நேற்று அவர்கள் சமைக்கும் அதே நேரத்தில் தான் எங்கள் வீட்டிலும் சமைத்தார்கள். அவர்கள் சமைத்த மீனின் ஆவி கூடுவிட்டு கத்திரிக்காய்க்குள் பாய்ந்திருக்குமோ? உங்களைப் போல் நானும் முற்போக்குவாதி தான். இந்த கூடுவிட்டு கூடு பாய்வதை எப்படி நம்புவது? அதனால் இதையும் விட்டுவிடலாம்.

பின் ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு அனுபவசாலி தொலைபேசியில் அழைத்து, ஒருவேளை எண்ணையிலிருந்து வாடை வந்திருக்கலாம் என்று எண்ணையை சோதிக்கச் சொன்னார். எண்ணெய் புதிய எண்ணெய் தான்; நல்லெண்ணெய் தான்; அதாவது நல்ல ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய் தான். அதே பாக்கில் இருந்து எடுத்த எண்ணையில் முந்தா நாள் பொறித்த அப்பளத்திலும் அன்றைக்கு தாளித்துக் கொட்டிய குழம்பிலும் எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இது எண்ணையால் விளைந்தது அல்ல. இதில் சோதனைக்குறிய விஷயம், உடன் சாப்பிட்ட ஒருவர் 'நீ நறுக்கியதால் தான் இப்படி ஆகிவிட்டதோ' என்று ஆரம்பித்தார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இத்தனை நாள் மனிதர்கள் மூலம் என்னை இம்சித்துக் கொண்டிருந்த கடவுள், இப்போது கத்திரிக்காய்களையும் ஏவிவிடத் தொடங்கியிருக்கிறார்.

கடவுளே! அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்.

Wednesday, May 4, 2011

எழுத்து எங்கிருந்து வருகிறது?

எலிசபெத் கில்பர்ட்டை பலருக்கும் தெரிந்திருக்கும்; Eat Pray Love என்ற புத்தகத்தை எழுதியவர். பல வருடங்கள் பல நாடுகளில் பெஸ்ட் செல்லராக இருந்த புத்தகம் அது. கற்பனைத் திறனைப் பற்றி அவர் அளித்த Ted Talkல் இரு கலைஞர்களை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவர் 95 வயதாகும் அமெரிக்க கவிஞர் ரூத் ஸ்டோன். மற்றொருவர் டாம் வெயிட்ஸ் (ஆம் Tom Waits தான். ஏதோ வாக்கியம் போல் இருக்கிறது தானே). வெயிட்ஸ் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர்.

ரூத் ஸ்டோன், "கவிதை பூமி அதிர என்னை நோக்கி ஓடி வரும்; அதோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடிப் போய் ஒரு தாளையும் பென்சிலையும் எடுத்து எழுதிவிடவேண்டும். சில நேரங்களில் கவிதையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது; பேப்பரையும் பென்சிலையும் அடையும் முன்பே கவிதை வேறு ஒரு கவிஞரைத் தேடி ஓடிவிடும். வேறு சில சமயம் கவிதை என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்; ஒரு கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கவிதையின் வாலைப்பிடித்து எழுத்து அப்படியே பேப்பரில் எழுதிவிடவேண்டும். கவிதை முழுமையாக கச்சிதமாக வந்துவிடும்; ஆனால், வலைப்பிடித்து இழுத்ததால் கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கி முதல் வார்த்தையில் முடியும்.”

அடுத்தது டாம் வெயிட்ஸ், ” ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அந்த மெலடி கேட்கிறது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது வேண்டும். ஐயோ! அதை தான் இழக்கப்போகிறேன்! இதை விட்டுவிட்டால் என்றென்றும் அந்த வருத்தம் என்னை குத்திக் கொண்டே இருக்கப்போகிறது” இதைத் தொடர்ந்து அவர் செய்தது தான் க்ளாசிக், காரிலிருந்து இறங்கி, மேலே பார்த்து “ஏய்! நான் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? இப்போ நான் பாட்டு எழுதும் நிலையிலா இருக்கிறேன். போ! உனக்கு வாழ்வு வேண்டுமானால் வேறு ஒரு சரியான சந்தர்ப்பத்தில் வா. இல்லை இன்றைக்கு வேறு யாரையாவது போய் தொந்தரவு செய். போய் லியோனார்ட் கோகனை தொந்தரவு செய்.”

பதிவுன் கடைசியில் இருக்கும் ஒளித்துண்டைப் பாருங்கள். மிக நல்லதொரு Ted Talk.

எலிசபெத் சொல்வது, ‘எழுத்து என்பது நமக்கு உள்ளே உருவாவதில்லை, அது நமக்கு வெளியில் இருக்கிறது. அதோடு நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பதே.

இதே போன்ற கருத்தைதான் தமிழின் முதன்மை எழுத்தாளர்களான லா.ச.ராவும் தி.ஜானகிராமனும் சொல்கிறார்கள்.

முதலில் லா.ச.ரா...

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

'' கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'


தி.ஜா...

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.


எலிசபெத் கில்பர்ட்டின் பேச்சு...

Friday, August 13, 2010

நொட்டாங்கை


இந்தா, இத அவர்கிட்ட கொடு...
இந்தாங்க...
ஏல! எப்பவும் இடதுகைதானா? வலது கையால கொடுடா...
என்னங்க, தம்பிக்கு இடதுகை பழக்கமா? எனக்கு கூட இடதுகை பழக்கம் தான் (அவருக்கு அவ்வளவு சந்தோஷம்)... தம்பிக்காக அஞ்சு ரூபா குறைச்சுக்கறேன்.
ஐம்பது ரூபா ஜால்ராவுக்கு அஞ்சு ரூபா தள்ளுபடி; நம்ம லேண்ட்மார்க் மாதிரி 10% தள்ளூபடி. அந்த தம்பி நாந்தேன், அப்புறம் அந்த கடை மதுரையில் எதோ ஒரு ரத வீதியில் இருக்கு. அதுவரைக்கும் எனக்கு மட்டும் தான் அப்படி ஒரு பழக்கம் இருக்குன்னு நினைத்திருந்தேன். ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் 13ம் தேதி இடதுகை பழக்கமுடையவர்கள் தினம் கொண்டாடுகிறார்கள் (யார் கொண்டுகிறார்கள் என்பது தெரியவில்லை, யாராவது நல்ல புத்திசாலி வியாபாரியா இருக்கலாம்). அந்த வாய்ப்பை நானும் பயன்படுத்திக்கிறேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.
நான் முதலில் குச்சி பிடிச்சு எழுத ஆரம்பிச்ச அப்போ, இடது கையால் எழுத ஆரம்பிச்சேன். அம்மா குச்சியை பிடுங்கி வலது கையில் கொடுத்தாங்க. கொஞ்ச நேரம் வலது கையில் எழுதிட்டே இருப்பேன்; எப்படித்தான் மாறுமோ தெரியாது, ஆனா இடதுகைக்கு குச்சி மாறிடும். எங்க மைதிலி டீச்சர், அதான் எங்க எல்.கே.ஜி டீச்சர், முதல்ல திட்டினாங்க; அப்புறம் அடிச்சாங்க. ஆனா என்னால மாத்திக்கவே முடியல. சரி எப்படியோ தொலைஞ்சு போன்னு எல்லாரும் விட்டுட்டாங்க.
இந்த இடதுகை பழக்கம் எதனால் வருதுன்னு ஏகப்பட்ட பேர் ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஒரு பிரபலமன தியரிப்படி, நம்ம மண்டைக்குள்ள மூளை மூளை அப்படின்னு ஒன்னு இருக்குமாம். அது வலது பக்கம் இடது பக்கம்னு இரண்டு பிரிவா இருக்குமாம். இடது பக்க ஆதிக்கம் அதிகமா இருந்தா வலதுகை பழக்கமும், வலது பக்க ஆதிக்கம் அதிகம் இருந்தா இடதுகை பழக்கமும் வருமாம். இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது.
இன்னொரு தியரிப்படி அம்மாவோட தொப்பைகுள்ள இருக்கும் போது எந்த கை நம்ம வாய்க்கு பக்கத்தில் இருக்குகோ அந்த கை பழக்கம் வருதாம். இன்னொருவர் கரு உருவாகும் போது  அதிக டெஸ்டோஸ்டீரோன் சுரந்தால்  இடது மூளை அவ்வளவா வளராதுன்னு சொல்றார். அதனால வலது மூளை ஆதிக்கம் அதிகமாயிடுமாம். அப்புறம் வழக்கமா சொல்லற ஒரு பதில். எல்லாமே டி.என்.ஏ-க்கு ள்ள தான் இருக்குனு சொல்லிட்டு, இப்போ இருக்கா  இல்லையான்னு  ஆராய்ச்சி  பண்ணறாங்க. (நன்றி: விக்கிபீடியா)
நான் சுமார் 99% வேலைகளை இடதுகையால் தான் செய்கிறேன்; சாப்பிடுவது தவிர. சிலர் சாப்பாட்டையும் இடதுகையால் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன். சிலர் சில வேலைகளுக்கு மட்டும் இடதுகையை பயன்படுத்துவார்கள். ஓர் எளிய உதாரணம், சச்சின். சச்சின் இடதுகையால் எழுதுவார்; ஆனால், வலதுகையால் தான் பந்துவீசுவார். சிலர் வேண்டுமென்றே இடதுகை பழக்கத்திற்கு மாறுவார்கள். டென்னிஸ் வீரர் ரபேல் நாடல், அப்படி மாறியவர் தான். பெரும்பாலும் அனைத்து வீரர்களும் வலதுகை வீரர்களை எதிர்த்தே பயிற்சி செய்வார்கள். அப்படி பயிற்சி செய்தவர்களுக்கு எதிராக இடதுகையில் ஆடுவது லாபம்.
இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் எல்லா உபகரணங்களும் வலதுகை பழக்கத்தை மட்டுமே மனதில் கொண்டு அமைக்கப்படுகின்றன. கத்திரிக்கோல், கம்ப்யூட்டர் மவுஸ்,  கதவு தாழ்பாழ், இப்படி நிறைய சொல்லலாம். இதெல்லாம் மற்றவர்கள் சொல்லி எனக்கு தெரிய வந்ததே தவிர, எனக்கு ஒரு போதும் இவை சங்கடமாக தெரியவில்லை. எல்லா பொருட்களும் வலதுகை பழக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக விபத்தில் சிக்குகிறார்கள்.
ஆனால், இந்த பழக்கம் ஒரு நல்ல அடையாளம். எங்க வகுப்பில் ஒரே உயரத்தில், கிட்டதட்ட ஒரே நிறத்தில் இரண்டு நடராஜன் இருந்தபோது நான் லெப்ட்நடராஜன் ஆனேன். அதற்கு முன்னால் சிறிய வகுப்பில் என் பேர் நொட்டாங்கை (இந்த நொட்டாங்கையும் பீச்சாங்கையும் எப்படி எங்கிருந்து வந்ததுன்னு தெரிஞ்சவங்க கண்டிப்பா சொல்லுங்க!). நான் இடதுகையில் எழுதுவதை ரொம்ப ஆச்சரியமா பார்த்தவங்க, நிறைய பேர். சிலர் நான் இடதுகையில் எழுதுவேன்னு சொன்னதும் அப்படியா? நீ வலமிருந்து இடம் எழுதுவியா?’ ன்னு கேப்பாங்க; அதாவது உருது எழுதற மாதிரி. எழுதிக்காமிச்ச பிறகுதான் அவங்களுக்குச் சந்தேகமே தீரும்.
இடதுகையால் எழுதுவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்ல. ஆனா, சில சூழ்நிலைக் கஷ்டங்கள் மட்டும் இருக்கு. என் வகுப்பில் ஒருவரோ இருவரோ தான் அப்படி இருப்பார்கள். சராசரியா நூறு பேர் இருக்கற வகுப்பில் அதுவே அதிகம். ஒரு பெஞ்சில் ஆறு பேர் உட்கார வேண்டும். நான் இடதுபக்க ஓரத்தில் உட்காரவில்லை என்றால், கண்டிப்பா பக்கத்தில் உள்ளவனின் (வலதுகையால் எழுதுபவர்) முழங்கையும் என் முழங்கையும் இடிக்கும். இரண்டு பேரும் சரியா எழுத முடியாது. அரசியலில் நாற்காலி போல, பள்ளிக்கூடத்தில் பெஞ்சு ஓரத்துக்கு அத்தனை போட்டி இருக்கும். அதை அடைய அதிக சாமர்த்தியம் வேணும். நான் எழுதும் போது ஒவ்வொரு வரியும் எனக்கு செங்குத்தா தான் எழுதுவேன்; அதுக்கு ஏத்தாப்புல காகிதத்தை திருப்பி வச்சுப்பேன்.
ஒரு முறை பரீட்டையில் நான் வலது பக்க ஓரமா உட்கார்ந்திருந்தேன், இடதுபக்கம் இன்னொருத்தன். மேற்பார்வைக்கு வந்தவர், அவர் பெயர் என்னமோ இருந்துட்டு போகுது. நாங்க அவரை செல்லமா சதுக்க பூதம்னு தான் கூப்பிடுவோம் (சதுக்க பூதம், சிலப்பதிகாரத்தில் ஒரு பாட்டில் வருகிறது). அவருக்கு நான் அந்த பையனுக்கு உதவி செய்கிறேனோன்னு ஒரு சந்தேகம். மனுஷன் கேள்வியால் துளைத்துவிட்டார்; பரீட்டையே எழுதவிடவில்லை.
ஒரு தடவை ஏதோ கல்யானமோ காதுகுத்தோ? ஒரு வீட்டுக்கு போயிருந்தோம். அங்க, இடதுகையால பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிச்சேன். அங்க வந்த ஒரு அம்மா 'Don't you have manners?' அப்படின்னு கேட்டாங்க. அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டிருந்தேன்; ‘manners’ அப்படின்னா என்னனு தெரியாது. எதோ அவங்ககிட்ட இல்லாதத கேக்கறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை, பந்தி பரிமாறுவது. சில பேர், இடதுகையால சாதம் போட்டா நான் சாப்பிட மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. சிலர், என்னோட இடதுகை பழக்கத்த சொன்னவுடன், ‘அப்படின்னா பரவாயில்லை! தாராளமா பரிமாறுன்னு சொல்லியிருக்காங்க.
கடைசியா ஒரு விஷயத்தோட முடிச்சுக்கறேன். இடதுகை பழக்கமுடைய நிறைய பிரபலங்கள், சாதனையாளர்கள் இருங்காங்க. அதனால், எல்லா இடதுகை பழக்கம் உள்ளவங்களும் அப்படித்தான் புத்திசாலியா, திறமைசாலியா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை உலகம் பூராவும் பலருக்கு இருக்கு. என்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?