Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Tuesday, September 27, 2011

சேனைப் புழுக்கு

குறிப்பு: விளையாட்டாக சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்படியொரு பதார்த்தம் உண்டு என்பதை தயவு செய்து நம்பிவிடுங்கள். 

தேவையான பொருள்கள்:
  • சேனைக் கிழங்கு - 250 கிராம்
  • தட்டப்பயறு      - 100 கிராம்
  • பச்சை மிளகாய்  - 3
  • தேங்காய்        - கொஞ்சம் (துருவியது)
  • உப்பு            - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன் 

சமையல் குறிப்பு template படி இந்த இடத்தில் புழுக்கு செய்த பின் எடுத்த புகைப்படம் வரவேண்டும். என்னிடம் புகைப்படம் இல்லை. வழக்கமாக நான் கேட்டுவிட்டு திருடி எடுத்துப் போடும் இடத்திலும் இந்தப் படம் இல்லை. (அது சரி! அங்கிருந்தால் நான் ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்.)

செய்முறை:
  • சேனைக்கிழங்கை சின்னச் சின்ன கன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்
  • சேனைக்கிழங்கையும் தட்டைப்பயிரையும் கூக்கரில் வைத்து சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ உப்பு சேர்த்து வெந்து கொள்ளவும். (கொஞ்சம் குழைவாகவே வெந்து கொள்ளலாம். இல்லையென்றால் சேனை செமிக்க கடினமாக இருக்கும்.)
  • பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்
  • ஒரு கனத்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணை விட்டு பின்,  வேகவைத்த கிழங்கையும் பயறுயும் போட்டு கிண்ட வேண்டும். 
  • இதேடு வகுந்து வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து கிண்டவும். 
  • பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த் துருவலை சேர்க்கவும்.
* சேனை நாக்கை அரிக்கலாம். நாக்கை பல்லில் சொறிந்து கொள்வதைத் தவிர வேறேதும் வழியில்லை.


மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: 
பருப்பு ரசம், எலுமிச்சை ரசத்திற்கு இது நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக செய்தால் தயிர்சாத்ததிற்கும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். 


தொடர்புள்ள சுட்டிகள்:
@jsrigovind
@losangelesram



Monday, July 18, 2011

சதி!

வழக்கம் போல் இந்த ஞாயிற்றுக்கிழமையும் காய்கறி வாங்க அதே கடைக்குத்தான் போனோம்.  உருளைக்கிழங்கு, வெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், கேரட் என்று அதே சைக்கிள் தான். இதைப் போன்ற கடைகளில் எந்தக் காய்கறியானாலும் பொறுக்கி பொறுக்கி வாங்கலாம். யாரும் தராசைத் தூக்கிக் கொண்டு அடிக்க வரமாட்டார்கள். பரங்கிக்காயை கூட சிலர் பொறுக்கி பொறுக்கித் தான் வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.   ஒவ்வொரு கத்திரிக்காயாக, ஓட்டையில்லமல், நசுங்காமல், சூத்தையில்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பார்த்து பொறுக்கிக் கொண்டு வந்தேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கத்திரிக்காயை ஏதாவது ரூபத்தில் சமைத்துவிடுவது வழக்கம். இந்த வாரம் சீக்கிரம் வேலையாக வேண்டும் என்பதால் கத்திரிக்காய் வதக்கல் செய்துவிடலாம் என்று ஒருமனதாக தீர்மானமாயிற்று. சரி கொண்டாருங்கள் நான் நறுக்கித் தருகிறேன் என்று களத்தில் இறங்கினேன். அதற்கு இரண்டு வாரம் முன்பு செய்த கத்திரிக்காய் வதக்கல் சொதப்பியதற்கு நறுக்கியவர் தான் காரணம் என்று   தீர்ப்பாகியிருந்தது ஞாபகம் வந்தது. இருந்தாலும் என்னுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக கருதி இந்த வேலையை செய்யத் துணிந்தேன்.

ரொம்பவே கவனமாக என்னால் முடிந்த அளவிற்கு மெல்லிசாக நறுக்கி அதை சமைக்கவும் செய்தாயிற்று. சமைத்தது நானில்லை, வேறொருவர்.

கொஞ்ச நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தோம். கத்திரிக்காயை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால் அதை தொண்டைக்கு கீழ் இறக்க முடியவில்லை. மீன் வாடை. கத்திரிக்காயை நீள நீளமாக நறுக்கி கறி செய்தால் அது மீனைப் போல் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதில் மீன் வாடையெல்லாம் இதற்கு முன் வந்ததே இல்லை. உடன் சாப்பிட்ட இரண்டு பேருக்கும் அதிர்ச்சி. 'டேய்! என்னடா இது?' அது கத்திரிக்காய் தானா என்ற சந்தேகமே அவர்களுக்கு வந்துவிட்டது. அந்தக் கத்திரிக்காய்களுக்கு விதித்தது அவ்வளவுதான் போலும் என்று அதை தூரப்போட்டுவிட்டு மாவடுவை சேர்த்துக்கொண்டோம்.

சரி இந்த வாடை எப்படித்தான் வந்திருக்கும்? ஒருவேளை அந்தக் கடையில் மீன் வண்டியில் கத்திரிக்கயையோ அல்லது கத்திரிக்காய் வண்டியில் மீனையோ ஏற்றிவந்திருக்கலாமோ? ஒவ்வொரு நொள்ளையாய் பார்த்து பார்த்து பொறுக்கும் போது வராத வாடை, 3mm  துண்டுகளாக நறுக்கும் போது வராத வாடை, சமைக்கும் போது வராத வாடை கடைசியில் எப்படி வந்தது. மீனும்-கத்திரியும் சேர்ந்து பயனித்திருக்கலாம் என்ற இந்த லாஜிக் எல்லா இடத்திலும் இடிப்பதால் இதை விட்டுவிடலாம்.

எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் எதோ ஒரு வீட்டில் ஞாயிறு தோறும் மீன் சமைப்பார்கள். நான் பார்த்ததில்லை ஆனால் வாடை வரும். நேற்றும் சமைத்தார்கள்.  நேற்று அவர்கள் சமைக்கும் அதே நேரத்தில் தான் எங்கள் வீட்டிலும் சமைத்தார்கள். அவர்கள் சமைத்த மீனின் ஆவி கூடுவிட்டு கத்திரிக்காய்க்குள் பாய்ந்திருக்குமோ? உங்களைப் போல் நானும் முற்போக்குவாதி தான். இந்த கூடுவிட்டு கூடு பாய்வதை எப்படி நம்புவது? அதனால் இதையும் விட்டுவிடலாம்.

பின் ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு அனுபவசாலி தொலைபேசியில் அழைத்து, ஒருவேளை எண்ணையிலிருந்து வாடை வந்திருக்கலாம் என்று எண்ணையை சோதிக்கச் சொன்னார். எண்ணெய் புதிய எண்ணெய் தான்; நல்லெண்ணெய் தான்; அதாவது நல்ல ரீபைண்டு சூரியகாந்தி எண்ணெய் தான். அதே பாக்கில் இருந்து எடுத்த எண்ணையில் முந்தா நாள் பொறித்த அப்பளத்திலும் அன்றைக்கு தாளித்துக் கொட்டிய குழம்பிலும் எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இது எண்ணையால் விளைந்தது அல்ல. இதில் சோதனைக்குறிய விஷயம், உடன் சாப்பிட்ட ஒருவர் 'நீ நறுக்கியதால் தான் இப்படி ஆகிவிட்டதோ' என்று ஆரம்பித்தார்.

எனக்குப் புரிந்துவிட்டது. இத்தனை நாள் மனிதர்கள் மூலம் என்னை இம்சித்துக் கொண்டிருந்த கடவுள், இப்போது கத்திரிக்காய்களையும் ஏவிவிடத் தொடங்கியிருக்கிறார்.

கடவுளே! அடுத்தது என்ன? காத்திருக்கிறேன்.