Saturday, January 22, 2011

மைசூர்பாகின் தற்கால நிலை...


இது உத்தமம்!
காகாசுர மாதப்பா எந்த நேரத்தில் முதலில் மைசூர்பாகை செய்தாரோ தெரியவில்லை. நேரம் காலம் தெரிந்திருந்தால், நவாம்ஸம், ராசி கட்டம் போட்டு, சனி, ராகு, கேது மேலும்  இடமிருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கும் கட்டத்தில் ஒவ்வோர் இடத்தை பட்டா போட்டு குடியமர்த்தியிருக்கலாம். ஆனால், மைசூர்பாகின் இப்போதையை நிலைமையை சொல்ல, சோளி உருட்ட தேவையில்லை, கோல் வேண்டாம், நாடி பிடிக்க அவசியமில்லை, கடவுளர்கள் நம்மீது இறங்கி டான்ஸ் ஆட வேண்டுமென்பதில்லை, புளியமரத்தடி ஜோசியரிடம் கேட்கவேண்டாம்; நானே சொல்லிவிடுவேன் மைசூர்பாகிற்கு இப்போது நேரம் சரியில்லை.

ஜாங்கிரி, ஜிலேபி, லட்டு, குலோப் ஜாமூன், அல்வா என்று எல்லா இனிப்புமே கொஞ்சம் சவுக்கு சவுக்கு தான். விதிவிலக்கு மனோகரமும், மைசூர்பாகும்; முரட்டு இனிப்புகள். கல்யாணத்திற்கு பெண் வீட்டில் பக்க்ஷனம் லிஸ்ட் கேட்கும் போது, மாப்பிள்ளைக்கு ஒன்னுவிட்ட ரெண்டுவிட்ட பாட்டியெல்லாம் வந்து, இத்தனை சுற்று முறுக்கு அத்தனை கேள், அத்தனை சுற்று முறுக்கு இத்தனை கேள், என்று ஏற்றிவிட்டுப்போவார்கள். சரி, இனிப்பு? நிறைய வைத்தாலும் பெரிதாக இருக்க வேண்டும். மேடையில் எங்கிருந்து பார்த்தாலும், வெட்டிக் கதை அளந்து கொண்டிருக்கும் மாமா மாமிகளுக்கு பெரியதாகத் தெரிய வேண்டுமே! ஜாங்கிரி, ஜிலேபி எல்லாம் அத்தனை பெரிதாக செய்வது  இன்றைய சமையல் தொழில்நுட்பத்தில் சாத்தியமே இல்லை. லட்டுவும் மாலாடும் (பொட்டுகடலை பொடி + சர்க்கரை பொடி சேர்த்த்ச் செய்வது) பெரிதாய் பிடிக்கலாம் தான். ஆனால் அவை எந்த நேரத்திலும் cohesivenessஐ இழந்து, தரைமட்டத்திற்கு வந்து தகுதி இழந்துவிடும் அபாயம் உண்டு. ஆனால், இந்த மைசூர்பாகு இருக்கிறதே அது அப்படிப்பட்டதில்லை. சுலபத்தில் உடைந்துவிடாது, அதே நேரத்தில் ஒரு குழவியை எடுத்து ஒரே போடு! துண்டம் துண்டமாக உடைந்துவிடும். பார்க்கவும் சும்மா ஜம்மென்று இருக்கும்.

இது அதமம்!
 மைசூர் பாகு செய்வது இரும்பை காய்ச்சி ஊற்றுவதற்குச் சமம். ஒருமுறை அது நன்றாக வந்துவிட்டால் அம்மா முகத்தில் இரண்டு நாளைக்கு அந்த சாதனை மின்னிக் கொண்டிருக்கும். இரும்பை காய்ச்சி வார்க்கும் போதும், பின் அதைக் குளிர்விக்க வைப்பதிலும் நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. அது உருகி ஓடும் பதம் வரும் வரை சூடாக்க வேண்டும். உருக்கி மண்வார்ப்பில் ஊற்றும் போது, வெளியாகும் வாயுக்கள் உலோகத்தோடே தங்கிவிடாமல் வெளியேற வசதிகள் இருக்க வேண்டும். அப்படி உலோகத்தோடே வாயுக்கள் தங்கிவிட்டால், அதற்கு பெயர் blow holes. இப்படி blow holes இருக்குமானால் அந்த இரும்பின் தரம் கீழ்தரம் தான். அது பெரும்பாலும் dynamic பயன்பாடுகளுக்கு லாயக்கில்லை.

சரி இந்த ஓட்டைகள் இல்லாமல் ஊற்றியாகிவிட்டது. அப்படியே இயற்கையாக குளிர்விக்க வைத்துவிடலாமா? அதிலும் இந்த நணுக்கம் வந்து படுத்துகிறது. இரும்பை எந்த வேகத்தில் குளிர்வித்தால் என்னென்ன அளவில் அதன் கடினத்தன்மை மாறும் என்று இருக்கிறது. வேண்டிய கடினத்திற்கு ஏற்ப தான் குளிர்விக்க வேண்டும். இரும்பில் கார்பன் சேர்த்தால் அது தான் ஸ்டீல். இரும்பில் இருக்கும் கார்பன் அளவைப் பொறுத்து அது ductile ஆகவோ brittle ஆகவோ இருக்கும். ஆனால் இந்த கார்பன், எடைவிகிததில் 2.1% மேல் போய்விட்டால் அது cast iron ஆகிவிடும். Cast iron is brittle. சுரண்டினால் பொடிப்போடியாக வரும். கையெல்லாம் கரி ஒட்டிக் கொள்ளும். கீழே போட்டால் உடைந்துவிடும். Compressionஐ சமத்தாக தாங்கிக் கொள்ளும் ஆனால் tensileஐ அதனால் தாங்கிக் கொள்ளமுடியாது.

மைசூர்பாகும் brittle தான். இப்போது அதைத் தான் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். Cast iron அளவிற்கு மைசூர் பாகு கடினமாக இருந்திருந்தால் இரண்டு மூன்று தலைமுறைக்கே பல் இல்லாமல் போயிருக்கும். இங்கு தான் அந்த blow holes விளையாடுகிறது. இரும்பில் blow holes இருந்தால் அதற்கு துரும்பு மதிப்புதான். மைசூர்பாகில் ஓட்டை இல்லையென்றால் அதை வைத்து கியாரண்டியாக வீடுகூட கட்டலாம். அந்தளவிற்கு ஸ்ட்ராங்.

சர்க்கரை, கடலைமாவு, நெய் மூன்றுமே போதும் மைசூர்பாகு செய்ய. கிண்டி ஊற்றியவுடன் காற்று உட்புகுந்து ஓட்டைகளை ஏற்படுத்தும். (இது அந்த ஓட்டைகள் எப்படி வருகிறது என்பதில் சில சந்தேகங்களும் இருக்கிறது. கொஞ்சம் அறிவும் பணமும் சேர்ந்த பிறகு இதை ஆராய்ச்சி செய்வதாக திட்டம்.) ஆனால் இப்போது செய்கிறார்களே ஒரு பாகு. அது திடப்பொருளே இல்லை. கிட்டதட்ட பற்பசை போன்றது. அறை வெப்பதில் கொழுக் கொழுக்கென்றே இருக்கும். அதில் ஓட்டையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. என்னமோ அடுத்த வீட்டு நெய்யை போட்டு செய்வது போல், எட்டு பாக்கெட் போட்டு சுற்றினாலும் ’நான் இந்தோ இருக்கேனே’ என்று எட்டிப்பார்க்கும் நெய்.  வேகாத கடலைமாவு. பிசுபிசுக்கும் சர்க்கரை. தெரியாத்தனமாக ஒருமுறை தொட்டுவிட்டால் கூட, ஒன்பது முறை ரின் சோப்பு போட்டு கழுவ வேண்டியிருக்கிறது.

எல்லாமே மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இது மாறினால் என்ன என்கிறீர்களா? அதெப்படி கடலைமாவும் நெய்யும் போட்டது எல்லாம் மைசூர்பாகாகிவிடுமா? ஆகிடுமா? சர்க்கரை போட்டதெல்லாம் இனிப்பாகிவிட முடியுமா? அதற்கு பின் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள வேண்டாமா.

சும்மா, உள்ளூர் ரவுடியை எல்லாம் போட்டு புரட்டி புரட்டி எடுக்க அடிக்கடி பேன்சி டிரெஸ்ஸில் வந்தபோன கடவுள், இதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் ஒரு தந்தி கூட அனுப்பவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒரு வேளை அவர் பெயரையும் இதில் கோர்த்துவிட்டார்களே என்று அமைதியாய் இருக்கிறாரா? இல்லை ஏதும் கான்ஃபிளிக்ட் ஆப் இண்டெரஸ்ட் இருக்கிறதா?

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ? அப்படியே அவர் இருந்தாலும் அவர் வருவாரோ வரமாட்டாரோ? ஒன்று மட்டும் நிச்சயம், இப்படி போலி மைசூர்பாகு செய்பவர்களை எல்லாம் காகாசுர மாதப்பா மன்னிக்கவே மாட்டார்.

நன்றி: அதமம்! போட்டோ பம்பாய் அக்காவின் வலைதளத்திலிருந்து உரிமையோடு எடுத்துக் கொண்டேன்.

2 comments:

  1. ரொம்ம்ம்ப ஃபீலிங்க்ஸ்தான்.

    நாங்க அதை 'மைசூர்பாகு'ன்னு எங்கப்பா சொன்னோம்? மைசூர்பாகு தனியா அதுபாட்டுக்கு இருக்கு. இது மைசூர்பா.

    ReplyDelete
  2. நல்ல பொருமல்தான்.

    நானும் உங்க ஜாதிதான். இப்போ இருக்கற மைசூர்பாவோ மைசூர் பாக்கோ அதெல்லாம் காகாசுர மாதப்பா மன்னிக்கமாட்டார்.

    இரும்பையும் மைசூர்பாக்கையும் ஒப்பிட்டு வேறுபடுத்தியதும் ஜோர்.

    கடிக்கத் தெரியாத தலைமுறையின் தின்பண்டங்கள் மைசூர்பா-லேஸ்-குர்குரே.

    போனதலைமுறையின் பல்வளம் சொல்லும் கடலைமிட்டாய்-பொருள்விளங்கா உருண்டை-முறுக்கு-தட்டை-சீடை எல்லாம் இப்போ கோக்கோட உபயத்தால அவுட்டேட்டட்.

    ReplyDelete