Wednesday, May 4, 2011

எழுத்து எங்கிருந்து வருகிறது?

எலிசபெத் கில்பர்ட்டை பலருக்கும் தெரிந்திருக்கும்; Eat Pray Love என்ற புத்தகத்தை எழுதியவர். பல வருடங்கள் பல நாடுகளில் பெஸ்ட் செல்லராக இருந்த புத்தகம் அது. கற்பனைத் திறனைப் பற்றி அவர் அளித்த Ted Talkல் இரு கலைஞர்களை பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவர் 95 வயதாகும் அமெரிக்க கவிஞர் ரூத் ஸ்டோன். மற்றொருவர் டாம் வெயிட்ஸ் (ஆம் Tom Waits தான். ஏதோ வாக்கியம் போல் இருக்கிறது தானே). வெயிட்ஸ் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர்.

ரூத் ஸ்டோன், "கவிதை பூமி அதிர என்னை நோக்கி ஓடி வரும்; அதோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடிப் போய் ஒரு தாளையும் பென்சிலையும் எடுத்து எழுதிவிடவேண்டும். சில நேரங்களில் கவிதையின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியாது; பேப்பரையும் பென்சிலையும் அடையும் முன்பே கவிதை வேறு ஒரு கவிஞரைத் தேடி ஓடிவிடும். வேறு சில சமயம் கவிதை என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்; ஒரு கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் கவிதையின் வாலைப்பிடித்து எழுத்து அப்படியே பேப்பரில் எழுதிவிடவேண்டும். கவிதை முழுமையாக கச்சிதமாக வந்துவிடும்; ஆனால், வலைப்பிடித்து இழுத்ததால் கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கி முதல் வார்த்தையில் முடியும்.”

அடுத்தது டாம் வெயிட்ஸ், ” ஒரு நாள் காரில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அந்த மெலடி கேட்கிறது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்கு அது வேண்டும். ஐயோ! அதை தான் இழக்கப்போகிறேன்! இதை விட்டுவிட்டால் என்றென்றும் அந்த வருத்தம் என்னை குத்திக் கொண்டே இருக்கப்போகிறது” இதைத் தொடர்ந்து அவர் செய்தது தான் க்ளாசிக், காரிலிருந்து இறங்கி, மேலே பார்த்து “ஏய்! நான் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பது உனக்குத் தெரியவில்லையா? இப்போ நான் பாட்டு எழுதும் நிலையிலா இருக்கிறேன். போ! உனக்கு வாழ்வு வேண்டுமானால் வேறு ஒரு சரியான சந்தர்ப்பத்தில் வா. இல்லை இன்றைக்கு வேறு யாரையாவது போய் தொந்தரவு செய். போய் லியோனார்ட் கோகனை தொந்தரவு செய்.”

பதிவுன் கடைசியில் இருக்கும் ஒளித்துண்டைப் பாருங்கள். மிக நல்லதொரு Ted Talk.

எலிசபெத் சொல்வது, ‘எழுத்து என்பது நமக்கு உள்ளே உருவாவதில்லை, அது நமக்கு வெளியில் இருக்கிறது. அதோடு நாம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பதே.

இதே போன்ற கருத்தைதான் தமிழின் முதன்மை எழுத்தாளர்களான லா.ச.ராவும் தி.ஜானகிராமனும் சொல்கிறார்கள்.

முதலில் லா.ச.ரா...

''ஒரு கதை உங்களுக்குள் உருவாகும் புள்ளியிலிருந்து, ஒரு முழுமையான வடிவத்தை அடைவது வரைக்கும் உள்ள செயல் பற்றிச் சொல்லமுடியுமா?''

'' கதை எங்கேத் தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மனது தளர்ந்துபோய், எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அங்கே கவித்துவம் ஏற்படுகிறது. 'சிந்காநதி'யில் ஒரு அத்தியாயம், 'my dark Gazzle of the night' என்று ஆரம்பிக்கிறது. ஏன் இப்படி ஆரம்பித்தீர்கள் என்று என்னைக் கேட்டால், எனக்குத் தெரியாது. என்னமோ தோன்றியது, அப்படி தொடங்குகிறேன். தொடங்கிய பிறகு, அதன் பாட்டுக்கு, அது போய்க்கொண்டே இருக்கிறது. ஒரு கதையில் ஒருவன், எதையோ, இப்படி கையில் தூக்கிக்கொண்டு போகிறான். உடனே, 'பறவையின் ஒடிந்த சிறகு போல்' என்று எழுதினேன். ஏன் இப்படி வந்தது என்று என்னைக் கேட்டால், எனக்கு எப்படித் தெரியும்! அது வந்துவிட்டது, அவ்வளவுதான். 'symbathy.'


தி.ஜா...

எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின. மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது. காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.


எலிசபெத் கில்பர்ட்டின் பேச்சு...

6 comments:

  1. அருமையான, பயனுள்ள பதிவுங்க. ஆனா ஒரே ஒரு சந்தேகம்: இந்தக் கவிதை ஏன் நான் போற ரூட்ல வர மாட்டேங்குது? :(

    ReplyDelete
  2. நன்றி குமார்!

    நட்பாஸ் சார், எந்தக் கவிதை?

    ReplyDelete
  3. அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்...

    ReplyDelete
  4. 'மனது தளர்ந்து போய்,எங்கே நெகிழ்ச்சி ஏற்படுகிறதோ அங்கே கவித்துவம் ஏற்படுகிறது'--அருமையான பதிவு.

    ReplyDelete