Monday, May 21, 2012

லூசுத்தனமான வாழ்க்கை #4

வீட்டில் சில மாதங்களுக்கு முன் ஃபிரிட்ஜ் சாவியை தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கிடைக்கவில்லை. கொஞ்ச நாள் கழித்து வாஷிங்மெஷின் வாங்கியதற்கான பில்லைத் தேடும் போது ஃபிரிட்ஜ் சாவி கிடைத்துவிட்டது. வாஷிங்மெஷின் பில் இன்னும் கிடைக்கவில்லை. வேறு ஏதாவது தேடும் போது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். எதையாவது தொலைக்க வேண்டும். பொருட்களை பத்திரமாக வைக்கும் போதே, அவற்றை தொலைத்துவிடுகிறோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒரு புத்தகத்தில் படித்த விஷயத்தை நினைவில் விஷுவலாக வைத்துக் கொண்டு, பின் தேடும் போது ஒரு வார்த்தை கூட நினைவில் இல்லையென்றாலும் ‘இந்தக் கதையில், ஏதோவொரு வலதுபக்க பக்கத்தில் மேலிருந்து இரண்டாவது பத்தியில் பார்த்தேன்’ என்று தேடிப்பிடித்துவிட முடிகிறது. இணையத்திலோ மின் புத்தகங்களிலோ, மிகச் சரியான கீவோர்ட் இல்லையென்றால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிரஷ்டமிருந்தால், இணையத்தில் முன்பு பயணித்த வழியிலேயே வந்தால் கண்ணில் படக்கூடும். இது கிட்டத்தட்ட கர்சீஃபை எங்கோ போட்டுவிட்டு, நாம் போன இடத்திற்கெல்லாம் போய் எங்காவது விழுந்திருக்கிறதா என்று தேடுவதைப் போன்றது தான். இப்போது தான் புக்மார்க், ஃபேவரைட், விஷ்லிஸ்ட் போன்றவற்றின் அருமை புரிந்திருக்கிறது.

விவாதங்களில் பங்கேற்கும் போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நாம் சொல்லாத கருத்தை டிஃபண்ட் செய்ய வைத்துவிடுவதோடு, பொருத்தமில்லாத, நீங்கள் விரும்பாத, மட்டமான ஒரு பட்டத்தையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். 'உனக்கு எல்லா விஷயமும் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருக்காதே’ என்று மூளைக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கொஞ்சம் கடினம் தான். ஆனால், செய்யவில்லையென்றால் தர்ம அடி நிச்சயம். "உன்னை யாராவது முட்டாள் என்று சொன்னால், ‘எனக்கே அந்தச் சந்தேகம் உண்டு’ என்று சொல்லிவிடு” என்று கண்ணதாசன் சொன்னதைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் ஒரு நாள் என் சகா தன்னுடைய கணிணியில் ஏதோ காண்பிப்பதற்காக கூப்பிட்டார். எழுந்து போய், அவருடைய தோளைத் தொட்டேன். ‘பட்’ என்று சத்தம். எனக்கு விரலில் சுள்ளென்ற வலி. அவருக்கு தோளில் வலி. அவர் கணிணியைத் தொட்டுக் கொண்டிருந்ததால், அதிலிருந்து தான் ஷாக் அடித்திருக்க வேண்டும் என்று நினைத்தோம். பின் சோதனை செய்ததில் அப்படித் தெரியவில்லை. அதற்கு சில நாட்கள் கழித்து நான் இன்னொரு நண்பரைத் யதேச்சையாகத் தொட, மீண்டும் ‘பட்’. இந்த முறை அவருக்கு வலிக்கவில்லையாம். எனக்கு வலித்தது. பிறகு ஒரு நாள், ஒரு லாப்டாப்பைத் திறக்கும் போது, அதிலிருந்த உலோக ஃபீடிங்கில் என் கை பட்டு, மீண்டும் ‘பட்’. பின் அலுவலக அறையின் கதவில் இருக்கும் இரும்புக் கைப்பிடியைத் தொடும் போது ‘பட்’. அலுவலகத்திற்கு என்னைச் சந்திக்க வந்த ஒருவர்‘ஹலோ! நடராஜன், ஹவ் ஆர் யூ’ என்று கைகொடுத்தார். நான் ஷாக் கொடுத்தேன். எப்படியோ ஸ்டாடிக் மின்சாரம் பாய்கிறது ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. 

இதை ஒரு நண்பரிடம் சொல்ல, அவர் நாற்காலியில் இருக்கும், கிழிக்கப்படாத ப்ளாஸ்டிக் உறையினால் தான் இப்படி நடக்கிறது என்றார். பள்ளி வகுப்புகளில், சீப்பையும் காதிதத் துண்டுகளையும் வைத்துச் செய்த பயிற்சியைக் கொண்டு இதை விளக்கவும் செய்தார். உடனடியாக எல்லா பிளாஸ்டிக் உறைகளையும் கிழித்துப் போட்டுவிட்டோம். ஒரு மாதம், ஒரு பிரச்சனையும் இல்லை. போன வாரத்திலிருந்து மீண்டும் ஷாக் அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்போது யாரையும் தொடுவதில்லை. கதவின் கைப்பிடியை ஒரு விரலால் கவனமாக இரண்டொரு முறை தொட்டுப் பார்த்துவிட்டுத்தான் கைவைக்கிறேன்.இது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். இல்லை, இதைவைத்து ஏதாவது ஒன்றிரண்டு சித்து வேலைகள் தேற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் வாக்குவாதம் செய்யும் போதெல்லாம், கடைசியில், ‘கொஞ்சமாவது சொன்ன பேச்சக் கேளேண்டா. பொண்ணாப் பொறந்திந்திருந்தேன்னா இந்நேரத்துக்கு கல்யாணத்தையாவது பண்ணிக் கொடுத்திருப்பேன், இப்படிப் உயிர வாங்கறையேடா!’ என்றே பல சமயம் முடிக்கிறார். இதையே, சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பனோடு எம்ப்ளாய்மெண்ட் நியூஸை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இப்படிப் பொரட்டறதுக்கு, பொண்ணாப் பொறந்திருந்தா இந்நேரத்துக்கு செட்டில் ஆகியிருக்கலாமேடா’ன்னு சொல்லியிருக்கேன். மேலே சொன்னது உங்களுக்கு ‘ஆணாதிக்கத்தனமாகத்’ தெரியலாம். தப்பில்லை. ஆனால் அந்நாளைய நிலைமை அப்படித்தான் இருந்தது.

1 comment:

  1. சூப்பர் super,you must write more. It is extremely difficult to bring the funniness into writing, and your are doing a great- balaji

    ReplyDelete